செய்திகள்

காங்கிரசில் சித்து நட்சத்திர அந்தஸ்து பிரசாரகராக மாறினார்

Published On 2019-04-01 15:06 IST   |   Update On 2019-04-01 15:06:00 IST
பாராளுமன்ற தேர்தலில் ராகுல் காந்தி, பிரியங்கா செல்ல முடியாத இடங்களுக்கு சித்துவை பிரசாரத்துக்கு அழைக்கிறார்கள். #LokSabhaElections2019 #Congress #NavjotSinghSidhu
புதுடெல்லி:

காங்கிரசில் ராகுல் காந்தி- பிரியங்கா இருவர் மட்டுமே தற்போது முக்கிய பிரசாரகாரராக உள்ளனர்.

இவர்களை தவிர மக்களை கவரும் முக்கிய நபர்கள் இல்லை. ஆனால் இப்போது இந்த இடத்தை கிரிக்கெட் வீரர் சித்து பிடித்துள்ளார்.

பாரதிய ஜனதாவில் முக்கிய பிரமுகராக இருந்த சித்து பஞ்சாபில் கடந்த சட்டசபை தேர்தல் காலத்தில் அந்த கட்சியில் இருந்து விலகி காங்கிரசில் சேர்ந்தார். காங்கிரசில் அவருக்கு மாநில மந்திரி பதவி வழங்கப்பட்டுள்ளது.

சித்து மிகச்சிறந்த பேச்சாளர் ஆவார். கருத்துக்களை மக்களுக்கு எளிதாக எடுத்துக் கூறுவதுடன் கேலி, கிண்டலுடன் மக்கள் மனம் மகிழும் வகையில் பேசுவார்.

சமீபத்தில் 5 மாநில சட்டசபை தேர்தல் நடந்தபோது மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மாநிலத்தில் அவர் பிரசாரத்துக்கு அழைக்கப்பட்டார். அவரது பிரசாரம் நன்றாக எடுபட்டது.

இப்போது பாராளுமன்ற தேர்தலிலும் அவரை பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்துள்ளனர். பல மாநிலங்களில் தங்கள் ஊருக்கு பிரசாரம் செய்வதற்கு அவரை அழைத்த வண்ணம் உள்ளனர்.

எனவே இந்தி பேசும் மாநிலங்கள் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து அவர் பிரசாரம் செய்ய இருக்கிறார். மேற்கு வங்கம், வடகிழக்கு மாநிலங்களில் இருந்து அவருக்கு அழைப்பு வந்துள்ளது.

பிரியங்கா தங்கள் மாநிலத்துக்கு வந்து பிரசாரம் செய்தால் நன்றாக இருக்கும் என்று பல தலைவர்களும் அழைக்கிறார்கள்.

ஆனால் உத்தரபிரதேசத்தில் அவர் கவனம் செலுத்த வேண்டியது இருப்பதால் அதிக அளவில் வெளி மாநில பிரசாரம் செல்ல அவர் விரும்பவில்லை.

அதே நேரத்தில் உத்தரபிரதேசத்தை தவிர்த்து உத்தரகாண்ட், டெல்லி மாவட்டங்களில் பிரியங்கா பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார்.

ராகுல், பிரியங்கா செல்ல முடியாத இடங்களுக்கு சித்துவை பிரசாரத்துக்கு அழைக்கிறார்கள். #LokSabhaElections2019 #Congress #NavjotSinghSidhu

Similar News