செய்திகள்

ரெயிலில் டீ கப்கள் மூலம் பாஜக பிரசாரம்?- எதிர்ப்புக்கு பின்னர் பணிந்தது நிர்வாகம்

Published On 2019-03-29 10:34 GMT   |   Update On 2019-03-29 10:34 GMT
ரெயிலில் டீ விற்பனை செய்ய பயன்படுத்தும் பேப்பர் கப்களில் ‘நான் உங்கள் காவலாளி’ என அச்சிடப்பட்டிருந்த விளம்பரத்திற்கு எதிர்ப்பு வலுத்ததையடுத்து ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. #SadaptiTrain #ChowkidarTeaCups
புது டெல்லி:

பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் ‘நானும் காவலன்தான்’ என்கிற புதிய பிரசார வீடியோவை வெளியிட்டார். மேலும் அந்த பதிவில் ‘‘உங்கள் காவலன் தேசத்துடன் துணை நிற்கிறார். நான் தனி ஆள் கிடையாது. யாரெல்லாம் ஊழல், சமூக கொடுமைகளை எதிர்த்து போராடுகிறார்களோ அவர்கள் எல்லோரும் காவலன்தான்’’ என்று குறிப்பிட்டு இருந்தார். தனது டுவிட்டர் பக்கத்தின் பெயரையும் பிரதமர் மோடி (சவுகிதார்) ‘காவலன் நரேந்திர மோடி’ என்று மாற்றம் செய்திருந்தார். பின்னர் பாஜக தலைவர்கள், ஆதரவாளர்கள் என பலர் தங்கள் பெயர்களுக்கு  முன்  ‘சவுகிதார்’ என இணைத்தனர்.



இதையடுத்து கடந்த வாரம் இந்தியன் ஏர்லைன்ஸ் அனுமதி சீட்டுகளில் பிரதமர் மோடியின் படம் இடம்பெற்று, தேர்தலுக்கான விளம்பரம் மேற்கொண்டதைபோல் இருந்தது. இதனை விமானத்தில் பயணம் செய்த ஒருவர் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார். இதற்கு எதிர்ப்பு வலுத்ததையடுத்து அந்நிறுவனம் இந்த டிக்கெட்டுகளை திரும்பப் பெற்றுக் கொண்டது.

இந்நிலையில் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயிலில் டீ விற்க பயன்படுத்தப்படும் பேப்பர் கப்களில் ‘நான் உங்கள் காவலாளி’ எனும் வாசகம் அச்சிடப்பட்டிருந்ததாக, பயணி ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார். இந்த பதிவைப் பார்த்த பலர், டீ கப்கள் மூலம் பிரசாரம் செய்வதாக கருத்து தெரிவித்தனர். அதிக எதிர்ப்பு எழுந்த நிலையில், ரெயில்வே நிர்வாகம் அந்த டீ கப்களை தடை செய்துள்ளது.

இது குறித்து ரெயில்வே நிர்வாகம் கூறுகையில், ‘இந்த செயல் இன்று நடைபெற்றதாக தகவல் அறிந்தவுடன், அந்த கப்கள் விற்க தடை விதிக்கப்பட்டது. அந்த கடையின் நிர்வாகி மீதும், காண்டிராக்டர் மீதும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மேலும் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது’ என்றார். #SadaptiTrain #ChowkidarTeaCups

Tags:    

Similar News