செய்திகள்
பேஸ்புக் காதலரை கரம் பிடித்த கல்லூரி மாணவி.

பேஸ்புக் மூலம் மலர்ந்த காதல் - இடுப்புக்கு கீழ் செயல் இழந்த வாலிபரை கரம் பிடித்த கல்லூரி மாணவி

Published On 2019-03-14 10:26 IST   |   Update On 2019-03-15 10:04:00 IST
கேரளாவில் விபத்தில் இடுப்புக்கு கீழ் செயல் இழந்த வாலிபரை கல்லூரி மாணவி கரம் பிடித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொழிஞ்சாம்பாறை:

கேரள மாநிலம் பத்தினம்திட்டா சீதாதேடு பகுதியை சேர்ந்தவர் புஷ்பகரன். இவரது மகள் நீது (வயது 18). கல்லூரி மாணவி. இவருக்கும் கோழிக்கோடு நாதாபுரம் நரிப்பாறையை சேர்ந்த நானு என்பவரது மகன் ஸ்ரீகாந்த் (24) என்பவருக்கும் பேஸ்புக் மூலம் நட்பு ஏற்பட்டது.

பரஸ்பரமாக கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர். ஸ்ரீகாந்த் ஒரு விபத்தில் சிக்கியதில் இடுப்புக்கு கீழ் உணர்ச்சிகளை இழந்தார். அதன்படி இடுப்புக்கு கீழ் செயல் இழந்து அவதியடைந்தார்.

இந்நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு நீது திடீரென மாயமானார். அதிர்ச்சியடைந்த பெற்றோர் இது குறித்து பத்தினம்திட்டா போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவி நீதுவை தேடினர். சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் தேடியபோது நீதுவின் போன் சிக்னல் நாதாபுரம் நரிப்பாறையில் இருப்பதை காட்டியது.

இது குறித்து தகவல் கிடைத்ததும் நாதாபுரம் டி.எஸ்.பி. ஆபிரகாம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மாணவியை மீட்டு கோர்ட்டில் ஒப்படைத்தனர்.

நீதிமன்றம் விசாரித்தபோது தனக்கு 18 வயது முடிந்து விட்டது. பேஸ்புக் காதலர் ஸ்ரீகாந்த் இடுப்புக்கு கீழ் உணர்ச்சிகள் இல்லாமல் செயல் இழந்துபோனாலும் அவரை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன் என்று கூறினார். வழக்கை விசாரித்த கோர்ட்டு திருமணத்துக்கு தடை ஏதும் இல்லை என்று தீர்ப்பளித்தது.

இதனையடுத்து நேற்று பெற்றோர்கள் சம்மதத்துடன் நீதுவுக்கும் ஸ்ரீகாந்த்துக்கும் திருமணம் நடந்தது. உறவினர்கள், நண்பர்கள் வாழ்த்தினர்.

Tags:    

Similar News