செய்திகள்

முசாபர்நகர் கலவரம் - முக்கிய சாட்சி சுட்டுக்கொலை

Published On 2019-03-13 10:31 GMT   |   Update On 2019-03-13 10:31 GMT
உத்தரபிரதேச மாநிலம் முசாபர் நகரில் ஏற்பட்ட கலவரம் தொடர்பான வழக்கின் முக்கிய சாட்சியாக இருந்தவர் சுட்டுக் கொல்லப்பட்டார். #Muzaffarnagarriots
முசாபர்நகர்:

உத்தரபிரதேச மாநிலம்  முசாபர்நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 2013-ம் ஆண்டு ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் கலவரம் ஏற்பட்டது. ஆகஸ்ட் 27-ம் தேதி கவால் கிராமத்தில் சச்சின், கவுரவ் ஆகிய இளைஞர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து கலவரம் பரவியது. இரு சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்ட இந்த பயங்கர மோதலில் 60க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 40 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வேறு இடத்திற்கு சென்று குடியேறினர்.

இந்நிலையில் கவால் கிராமத்தைச் சேர்ந்த சச்சின் மற்றும் கவ்ரவ் ஆகிய இளைஞர்கள் கொல்லப்பட்டது தொடர்பான வழக்கு விசாரணை முசாபர் நகர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இவ்வழக்கில் வாதப் பிரதிவாதங்கள் முடிவடைந்ததையடுத்து கடந்த பிப்ரவரி 6ம் தேதி  தீர்ப்பு வழங்கப்பட்டது. இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முஜாமில், முஜாசிம், ஃபர்கான், நதீம், ஜனங்கிர், அப்சல் மற்றும் இக்பால் ஆகிய 7 பேர் குற்றவாளிகள் என கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி அறிவித்தார்.

இந்த நிலையில் கலவரத்தின்போது நவாப் மற்றும் சகித் ஆகியோர் அடித்துக்கொல்லப்பட்டது தொடர்பான வழக்கில் 8 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. கொலை செய்யப்பட்டவர்களின் சகோதரர் அஷ்பக், இந்த வழக்கில் முக்கிய சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ளார்.

வழக்கின் அடுத்தகட்ட விசாரணை மார்ச் 25-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், முக்கிய சாட்சியான அஷ்பக் கொலை செய்யப்பட்டுள்ளார். கடோலி நகரில் பால் வியாபாரம் செய்து வந்த ஆஷிப், கடந்த திங்கள் அன்று வழக்கம்போல பால் டெலிவரி செய்ய போகும் போது அவரை மர்ம நபர் சுட்டுக் கொன்றுள்ளான்.

இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகள் மூலம் கொலையாளியை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். #Muzaffarnagarriots

Tags:    

Similar News