செய்திகள்

பிரதமர் மோடி பயங்கரவாதி போல் செயல்படுகிறார் - ராகுல் முன்னிலையில் விஜயசாந்தி ஆவேசம்

Published On 2019-03-10 14:49 IST   |   Update On 2019-03-10 15:03:00 IST
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முன்னிலையில் பிரதமர் மோடியை பயங்கரவாதி என்று விஜயசாந்தி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. #RahulGandhi #PMModi

ஐதராபாத்:

தெலுங்கானா மாநிலம் ‌ஷம்சபாத்தில் நேற்று காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரசார பொதுக் கூட்டம் நடந்தது.

இதில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தெலுங்கானா மாநில காங்கிரஸ் தேர்தல் பிரசார குழு தலைவர் நடிகை விஜயசாந்தி மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் விஜயசாந்தி, பிரதமர் மோடியை கடுமையாக விமர்சனம் செய்து ஆவேசமாக பேசினார். அவர் பேசியதாவது:-

பிரதமர் மோடியை பார்த்து ஒவ்வொரு மக்களும் பயப்படுகிறார்கள். அவர் எந்த நிமிடத்தில் அவர் குண்டு வீசுவார் என்ற அச்சத்துடனேயே உள்ளனர். அவர் பயங்கரவாதி போல இருக்கிறார். மக்கள் மீது அன்பை செலுத்துவதற்கு பதில் மோடி மக்களை பயமுறுத்தி வருகிறார். இது பிரதமருக்கான பண்பு கிடையாது.

மோடி சர்வாதிகாரியை போல் ஆட்சி செய்கிறார். அவர் ஜனநாயகத்தை கொன்று வருகிறார். பண மதிப்பிழப்பு நடவடிக்கை முதல் ஜி.எஸ்.டி.வரை மற்றும் புல்வாமா தாக்குதல் உள்ளிட்ட அனைத்து வி‌ஷயங்களிலும் நாட்டு மக்கள் மீது பயங்கரவாத தாக்குதலை நடத்தி வருகிறார். அவரது செயல்பாடுகளால் பயங்கரவாதி போல் தெரிகிறார்.

வருகிற பாராளுமன்ற தேர்தலில் மோடிக்கும் ராகுல் காந்திக்கும் தான் போர். மோடியின் குறிக்கோள் சர்வாதிகாரம், ராகுல் காந்தியின் குறிக்கோள் ஜனநாயகம். அடுத்த 5 ஆண்டு காலத்துக்கு இதுபோன்று ஆட்சியை நடத்த மோடி விரும்புகிறார். அதற்கு மக்கள் வாய்ப்பு அளிக்க கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

ராகுல் காந்தி முன்னிலையில் பிரதமர் மோடியை பயங்கரவாதி என்று விஜயசாந்தி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News