செய்திகள்

இந்தியாவில் புதிய வடிவில் அறிமுகமாகும் 20 ரூபாய் நாணயம்

Published On 2019-03-07 15:53 IST   |   Update On 2019-03-07 15:53:00 IST
இந்தியாவில் விரைவில் அழகிய வடிவில் புதிய ரூ.20 நாணயம் புழக்கத்தில் விடப்பட உள்ளது. #PMModi #20RsCoinAnnounced #RBI
புதுடெல்லி:

இந்தியாவில் விரைவில் 20 ரூபாய் நாணயம் புழக்கத்தில் விடப்படும் என மத்திய நிதித்துறை அறிவித்துள்ளது. இந்த நாணயம் மற்ற பழைய நாணயங்களை போல் அல்லாமல், பன்னிருகோணம் எனும் உருவில் புதிய வடிவமைப்பை பெறவுள்ளது.

இந்நாணயம் தொடர்பாக நிதித்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் ‘27 மில்லி மீட்டர் சுற்றளவு கொண்ட இந்த புதிய ரூ.20 நாணயத்தில், மூன்று வகையான உலோகங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. ஏற்கனவே புழக்கத்தில் உள்ள ரூ.10 நாணயத்தில் ஓரங்களில் நுட்பமான வெட்டுகள் போன்ற அமைப்பு இருக்கும். ஆனால், இந்த ரூ.20 நாணயத்தில் அதுபோன்று ஏதும் இல்லாமல் உருவாக்கப்பட உள்ளது’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேபோல் கடந்த 2009ம் ஆண்டு  மார்ச் மாதம், முதன்முறையாக நிதித்துறை, ரூ.10  நாணயத்தை வெளியிட்டது. அன்று முதல் இதுவரை, 14 முறை ரூ.10  நாணயத்தின் வடிவம் மாற்றப்பட்டுள்ளது.

இந்த தொடர் மாற்றங்களினால் பல்வேறு கடைகளிலும், நிறுவனங்களிலும் அதனை வாங்க மறுத்தனர். இதனால் மக்கள் மிகுந்த குழப்பத்திற்கு ஆளாகினர். இதையடுத்து கடந்த 2018ம் ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கி, புழக்கத்தில் இருக்கும் 14 விதமான ரூ.10 நாணயமும் செல்லும் என தெரிவித்துள்ளது.



இதற்கிடையே, பார்வையற்றோர் எளிதாக அறிந்துகொள்ளும் வகையில், புதிய நாணயங்களை பிரதமர் மோடி மற்றும் நிதி மந்திரி அருண் ஜெட்லி ஆகியோர் இன்று வெளியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.  #PMModi #20RsCoinAnnounced #RBI

Similar News