செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக் கைது

Published On 2019-02-23 04:11 GMT   |   Update On 2019-02-23 04:11 GMT
ஜம்மு காஷ்மீரில் பிரிவினைவாத அமைப்பின் தலைவரான யாசின் மாலிக்கை போலீசார் கைது செய்துள்ளனர். #YaseenMalik #PulwamaAttack
ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-ம் தேதி பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு நடத்திய தற்கொலைத் தாக்குதலில், துணை ராணுவப் படையைச் சேர்ந்த 40 வீரர்கள் உயிரிழந்தனர்.

இந்த தாக்குதலுக்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். பயங்கரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்று தொடர்ந்து கூறி வருகின்றனர். போராட்டம், கடையடைப்பு என தொடர்ந்து எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.


புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து போலீசாரும் துணை ராணுவமும் உஷார்படுத்தப்பட்டு கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.பாகிஸ்தானுக்கு ஆதரவாக வன்முறையை தூண்டும் பிரிவினைவாத சக்திகளை ஒடுக்கும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. ஜம்மு காஷ்மீரில் உள்ள பிரிவினைவாத தலைவர்களுக்கான பாதுகாப்பையும் அரசு விலக்கிக்கொண்டது.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி தலைவரான யாசின் மாலிக்கை நேற்று இரவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். மைசுமாவில் உள்ள அவரது இல்லத்தில வைத்து அவரை  கைது செய்து, காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அவர் தவிர மற்ற எந்த தலைவரும் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கிறாரா? என்ற  தகவல் வெளியாகவில்லை.

ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கும் சட்டப்பிரிவுக்கு (35-ஏ) எதிரான வழக்கில், உச்ச நீதிமன்றம் இன்னும் ஓரிரு நாளில் முக்கிய விசாரணை நடத்த உள்ள நிலையில், யாசின் மாலிக்கை போலீசார் கைது செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. #YaseenMalik #PulwamaAttack
Tags:    

Similar News