செய்திகள்

அகிலேஷ் தடுத்து நிறுத்தப்பட்டதை எதிர்த்து போராட்டம்- 296 பேர் மீது வழக்கு

Published On 2019-02-13 04:15 GMT   |   Update On 2019-02-13 04:15 GMT
உத்தர பிரதேசத்தில் அகிலேஷ் யாதவை விமான நிலையத்தில் அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதைக் கண்டித்து போராட்டம் நடத்திய 296 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. #AkhileshStopped #SamajwadiProtest
லக்னோ:

அலகாபாத்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் மாணவர் பேரவைத் தலைவர் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்பதற்காக, சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் திட்டமிட்டிருந்தார். இதற்காக லக்னோ விமான நிலையத்துக்கு சென்ற அவரை விமானத்தில் ஏறவிடாமல் அதிகாரிகள் தடுத்துள்ளனர். அலகாபாத் செல்ல அனுமதி மறுத்துவிட்டனர்.



அகிலேஷ் தடுத்து நிறுத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து லக்னோ, பிரயாக்ராஜ், ஜான்ப்பூர், ஜான்சி, கானுஜ், பால்ராம்ப்பூர், கோராக்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் சமாஜ்வாடி கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. பல்வேறு பகுதிகளில் போலீசாருடன் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, போலீசார் தடியடி நடத்தினர். பிரயாக்ராஜ் பகுதியில் போலீசாரின் தாக்குதலில் தர்மேந்திர யாதவ் எம்பி உள்ளிட்ட சிலர் காயமடைந்தனர்.

இவ்வாறு மாநிலம் முழுவதும் நடைபெற்ற பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.  2 எம்பிக்கள் உள்ளிட்ட 46 முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட 296 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அகிலேஷ் தடுத்து நிறுத்தப்பட்ட விவகாரம் நேற்று உ.பி. சட்டமன்றம் மற்றும் பாராளுமன்றத்திலும் எதிரொலித்தது. சமாஜ்வாடி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. #AkhileshStopped #SamajwadiProtest

Tags:    

Similar News