செய்திகள்

மக்கள் வங்கி கணக்குகளில் ரூ.5,80,000 கோடி போட்டிருக்கிறோம் - பிரதமர் மோடி பெருமிதம்

Published On 2019-01-22 14:43 IST   |   Update On 2019-01-22 15:49:00 IST
எங்கள் அரசால் நாட்டு மக்களின் வங்கி கணக்குகளில் பல்வேறு திட்டங்களின்கீழ் 5 லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் போடப்பட்டுள்ளது என பிரதமர் மோடி இன்று தெரிவித்துள்ளார். #PravasiBharatiyaDiwas #Modi
லக்னோ:

உத்தரப்பிரதேசம் மாநிலம் வாரணாசி நகரில் ‘பிரவசி பாரதிய திவஸ்’ (வெளிநாடு வாழ் இந்தியர் தினம்) மாநாட்டை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்து பேசினார்.

இந்தியா இன்று பல்வேறு அம்சங்களில் உலகத்துக்கு தலைமையேற்கும் நிலைக்கு உயர்ந்துள்ளதாக குறிப்பிட்ட மோடி, சர்வதேச சூரிய ஆற்றல் கூட்டமைப்பு அவற்றில் குறிப்பிடத்தக்க ஒரு அம்சமாகும். இதன்மூலம் ஒரே உலகம், ஒரே சூரியன், ஒரே ஆற்றல் பகிர்மானம் என்னும் நிலை இன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் அனைவருமே இந்தியாவின் தூதர்கள்தான். நமது ஆற்றல் மற்றும் திறமைகளின் அடையாளமாக அவர்கள் திகழ்கிறார்கள். இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் மொரீஷியஸ், போர்ச்சுகல், அயர்லாந்து போன்ற நாடுகளின் தலைமை பதவிகளில் உள்ளனர்.

மக்களுக்காக தீட்டப்படும் திட்டங்களில் ஒரு ரூபாயில் 15 பைசா மட்டுமே பயனாளிகளை போய் சேர்வதாக முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி குறிப்பிட்டிருந்தார்.  அப்படி, முந்தைய காங்கிரஸ் ஆட்சி காலங்களில் ஒரு ரூபாயில் 85 பைசா கொள்ளையடிக்கப்பட்டது. இதை தடுக்க அன்றைய ஆட்சியாளர்கள் முன்வரவில்லை.

ஆனால், நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் இந்த நிலையை மாற்றியுள்ளோம். கொள்ளைக்கான கதவுகள் அடைக்கப்பட்டது. தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பயனாளிகளுக்கான நலத்திட்டங்கள் நேரடியாக அவர்களின் வங்கி கணக்குகளில் செலுத்தப்பட்டு வருகின்றது.



அவ்வகையில், கடந்த நான்கரை ஆண்டுகாலத்தில்  பல்வேறு திட்டங்களின்கீழ் 5 லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் எங்கள் அரசால் போடப்பட்டுள்ளது. பழைய பாணியிலேயே இந்த நாட்டின் ஆட்சி நடந்திருக்குமானால்  இந்த 5 லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாயில்  4 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய் இந்நேரம் மாயமாகிப் போயிருக்கும் என்றும் மோடி தெரிவித்தார். #PravasiBharatiyaDiwas #Modi
Tags:    

Similar News