செய்திகள்

சட்ட விரோத பணப்பரிவர்த்தனை- சோனியா மருமகன் வதேரா கோர்ட்டில் ஆஜராக சம்மன்

Published On 2019-01-22 07:13 GMT   |   Update On 2019-01-22 07:13 GMT
சட்ட விரோத பணப்பரிவர்த்தனை தொடர்பாக வருகிற 12-ந்தேதி அமலாக்கத்துறை முன்பு ராபர்ட் வதேரா ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டது. #RobertVadra
புதுடெல்லி:

சோனியாகாந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா பல்வேறு தொழில் நிறுவனங்களை நடத்தி வருகிறார்.

ஸ்லைலைட் ஹாஸ்பிடா லிட்டி எனும் நிறுவனத்தையும் வதேரா நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தின் பங்கு தாரர்களாக அவரது தாயார் மவுரீன் வதேராவும் இருக்கிறார்.

இந்த நிறுவனம் சார்பில் ராஜஸ்தான் மாநிலம் பீகானீரில் அரசு நிலம் வாங்கப்பட்டது. அதில் ராபர்ட் வதேரா, காங்கிரஸ் தலைவர்களை பயன்படுத்தி முறைகேடு செய்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பாக மத்திய அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது. அப்போது சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா சட்டவிரோதமாக பணப்பரிவர்த்தனை செய்து இருப்பது தெரிய வந்தது.

இது தொடர்பான வழக்கு விசாரணை ராஜஸ்தான் ஐகோர்ட்டில் நடந்து வருகிறது. ராபர்ட் வதேரா மீது நடவடிக்கை எடுக்க அமலாக்கத்துறை முயற்சி செய்தபோது ராஜஸ்தான் ஐகோர்ட்டு அதற்கு தடை விதித்தது.

நேற்று இந்த தடையை ராஜஸ்தான் ஐகோர்ட்டு விலக்கியது. மேலும் அமலாக்கத்துறை விசாரணைக்கு ராபர்ட் வதேரா முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டது.

சட்ட விரோத பணப்பரிவர்த்தனை தொடர்பாக வருகிற 12-ந்தேதி அமலாக்கத்துறை முன்பு ராபர்ட் வதேரா ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டது. இதற்காக ராபர்ட் வதேராவுக்கு சம்மன் அனுப்ப கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

விசாரணைக்கு வரும் ராபர்ட் வதேராவை கைது செய்ய அமலாக்கத்துறை திட்டமிட்டு இருந்தது. ஆனால் ராபர்ட் வதேராவை கைது செய்யக்கூடாது என்று ஐகோர்ட்டு அறிவுறுத்தி உள்ளது.

எனவே வருகிற 12-ந்தேதி அமலாக்கத்துறை முன்பு ராபர்ட் வதேரா ஆஜர் ஆவார் என்று தெரிகிறது. இதனால் அரசு நிலத்தை காங்கிரஸ் செல்வாக்கை பயன்படுத்தி ராபர்ட் வதேரா முறைகேடு செய்த விவகாரம் சூடுபிடித்துள்ளது. #RobertVadra
Tags:    

Similar News