செய்திகள்

கொல்கத்தாவில் 5 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ

Published On 2019-01-20 20:45 GMT   |   Update On 2019-01-20 20:45 GMT
கொல்கத்தாவில் துணிக்கடை கட்டிடத்தின் தரை தளத்தில் தீப்பிடித்தது. கொழுந்துவிட்டு எரிந்த தீ அடுத்தடுத்த மாடிகளுக்கு மளமளவென பரவியது. #Kolkata #Building #FireAccident
கொல்கத்தா:

மேற்கு வங்காளத்தின் தலைநகர் கொல்கத்தாவின் தெற்கு பகுதியில் உள்ள கரியாஹட் என்ற இடத்தில் 5 மாடிக்கட்டிடம் ஒன்று உள்ளது. இந்த கட்டிடத்தின் தரை தளம் மற்றும் முதல் தளத்தில் துணிக்கடை ஒன்றின் குடோன் உள்ளது. மற்ற தளங்களில் குடியிருப்புகள் உள்ளன.

இந்த நிலையில், நேற்று அதிகாலை 1 மணியளவில் திடீரென இந்த கட்டிடத்தின் தரை தளத்தில் தீப்பிடித்தது. கொழுந்துவிட்டு எரிந்த தீ அடுத்தடுத்த மாடிகளுக்கு மளமளவென பரவியது. இதனால் பதறிப்போன மக்கள் அலறி அடித்துக்கொண்டு வீடுகளை விட்டு வெளியேறினர்.

இதையடுத்து, இது பற்றி தீ அணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 20-க்கும் மேற்பட்ட வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அவர்கள் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

அதிர்ஷ்டவசமாக இந்த தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அதே சமயம் துணி குடோனில் இருந்த லட்சக்கணக்கிலான மதிப்புடைய சரக்குகள் தீக்கிரையாகின. தீ விபத்து எப்படி நேரிட்டது என்பது குறித்து தெரியவில்லை. இது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.  #Kolkata #Building #FireAccident
Tags:    

Similar News