செய்திகள்

உத்தரபிரதேச வன்முறை - 27 பேர் மீது வழக்குப்பதிவு

Published On 2018-12-04 04:17 GMT   |   Update On 2018-12-04 04:17 GMT
உத்தரபிரதேச மாநிலம் புலந்த்சாகரில் நடந்த வன்முறை தொடர்பாக 27 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #BulandshahrViolence
புலந்த்சாகர்:

உத்தரபிரதேச மாநிலம் புலந்த்சாகரில் பசுவதைக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தில் வன்முறை வெடித்தது. போராட்டக்காரர்கள், போலீசாரை நோக்கி கற்களை வீசி தாக்கியதுடன், புறக்காவல் நிலையம் மற்றும் அங்கிருந்த வாகனங்களுக்கும் தீ வைத்ததால் பதற்றம் அதிகரித்தது.

இதையடுத்து போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் ஒருவர் உயிரிழந்தார். போராட்டக்காரர்கள் தாக்கியதில் போலீஸ் தரப்பில் இன்ஸ்பெக்டர் சுபோத் குமார் சிங் உயிரிழந்தார்.



இந்த வன்முறை தொடர்பாக 27 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி உள்ளனர். போலீசாரின் முதல் தகவல் அறிக்கையில் அடையாளம் தெரியாத 60 பேரின் பெயர்களும் சேர்க்கப்பட்டுள்ளன. இதேபோல் பசுவைக் கொன்ற நபருக்கு எதிராக மற்றொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

விசாரணை தொடர்பாக காவல்துறை கூடுதல் இயக்குனர் பிரசாந்த் குமார் கூறுகையில், ‘புலந்த்சாகர் வன்முறை தொடர்பாக 2 பேரை காவலில் வைத்து விசாரணை நடத்தி வருகிறோம். போராட்டத்தில் வன்முறை ஏன் ஏற்பட்டது? இன்ஸ்பெக்டர் சுபோத் குமாரை மற்ற போலீசார் தனியே விட்டது ஏன்? என்பது குறித்து விசாரிப்பதற்காக சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது’ என்றார். #BulandshahrViolence
Tags:    

Similar News