செய்திகள்

சபரிமலைக்கு சென்று பரபரப்பை ஏற்படுத்திய மாடல் அழகி ரெஹானா கைது

Published On 2018-11-27 15:37 IST   |   Update On 2018-11-27 15:37:00 IST
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்ல முயன்று பரபரப்பை ஏற்படுத்திய மாடல் அழகி ரெஹானா பாத்திமாவை இன்று போலீசார் கைது செய்தனர். #SabarimalaTemple #Rehna #Rehnaarrested
திருவனந்தபுரம்:

சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட் தீர்ப்பையடுத்து அங்கு சென்ற சில பெண்களில் மாடல் அழகி ரெஹானா பாத்திமாவும் ஒருவர்.

இஸ்லாமிய மதத்தை சேர்ந்த இவர் ஐயப்பன் கோவிலுக்கு செல்வதற்கான எந்த விரதமும் மேற்கொள்ளாமல் நெய் தேங்காய், அரிசிக்கு பதிலாக ஆரஞ்சு மற்றும் ஆப்பிள் பழங்களை இருமுடியாக கட்டிக்கொண்டு கடந்த மாதம் 19-ம் தேதி ஐயப்பன் கோவிலுக்குள் நுழைய முயன்றார்.

கேரள மந்திரியின் உத்தரவையடுத்து அவரை போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். இந்த சம்பவத்தின் மூலம் தொடர்ந்து செய்திகளில் விவாதப்பொருளாக ஆகிப்போன ரெஹானா மற்றும் அவரது குடும்பத்தினரை கேரள மாநில முஸ்லிம் ஜமாஅத் தள்ளிவைத்துள்ளது.



இதற்கிடையில், ரெஹானா மீது இந்திய கிரிமினல் சட்டம் 295A-வின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் போலீசார் தன்னை கைது செய்யலாம் என கருதிய ரெஹானா முன் ஜாமின் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை கேரள ஐகோர்ட் கடந்த 16-ம் தேதி தள்ளுபடி செய்து விட்டது.

இந்நிலையில்,கொச்சி மாவட்டம், பலரிவோட்டத்தில் இன்று பிற்பகல் ஒருமணியளவில் ரெஹானாவை போலீசார் கைது செய்தனர்.

மத உணர்வுகளை வைத்து பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் ரெஹானா பதிவிட்டிருந்ததாக சபரிமலை ஆச்சார சம்ரக்‌ஷனா சமிதி அமைப்பின் செயலாளர் பத்மகுமார் அளித்த புகாரின் அடிப்படையில் இந்திய கிரிமினல் சட்டம் 153A-வின் கீழ் கடந்த 20-ம் தேதி வழக்குப்பதிவு செய்திருந்த போலீசார் அவரை இன்று கைது செய்துள்ளதாக தெரிகிறது. #SabarimalaTemple #Rehna #Rehnaarrested
Tags:    

Similar News