செய்திகள்

சபரிமலை விவகாரம்- 1000 பேஸ்புக் கணக்குகளை கண்காணிக்கிறது கேரள போலீஸ்

Published On 2018-11-23 10:11 GMT   |   Update On 2018-11-23 10:11 GMT
சபரிமலை தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்தவர்கள் தொடர்பான தகவல்களை சேகரிக்கும் வகையில், 1000க்கும் மேற்பட்ட பேஸ்புக் கணக்குகளை போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
திருவனந்தபுரம்:

சபரிமலையில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கடந்த செப்டம்பர் 28-ம் தேதி தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பு கேரளா மட்டுமின்றி நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்து அமைப்புகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டன. போராட்டத்தை ஒடுக்க மாநில காவல்துறையும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

இந்நிலையில், சபரிமலை வழக்கின் தீர்ப்புக்கு எதிராக போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தவர்களின் பெயர் மற்றும் அவர்களின் பின்னணி உள்ளிட்ட விவரங்களை கேரள காவல்துறை திரட்டி வருகிறது. அதன் ஒரு பகுதியாக 1000க்கும் மேற்பட்ட பேஸ்புக் கணக்குகளை கண்காணித்து வருகிறது.

இது தொடர்பாக மாநில ஹைடெக் சைபர் செல், மாவட்ட சைபர் செல் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் சுமார் 40 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.



உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக கருத்துக்களை பதிவிடுவதற்கும், போராட்டத்திற்கு அழைப்பு விடுப்பதற்கும் பலர் சமூக வலைத்தளங்களை கருவியாக பயன்படுத்தினர். இவற்றில் பல பேஸ்புக் கணக்குகள் வெளிநாட்டில் இருந்து செயல்பட்டதாக போலீசார் கண்டறிந்துள்ளனர்.

சைபர் செல் மூலம் பெறப்பட்ட தகவல்களை பேஸ்புக் அதிகாரிகளிடம ஒப்படைத்து, சம்பந்தப்பட்ட நபர்களை கண்டுபிடிப்பதற்கு போலீசார் திட்டமிட்டுள்ளனர். அதன்பின்னர், அந்தந்த நாடுகளின் தூதரகங்கள் மூலம் நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்துள்ளனர். #SabarimalaVerdict #SabarimalaProtest #KeralaPolice #FacebookAccounts
Tags:    

Similar News