செய்திகள்

கமி‌ஷன் பேர்வழியாக செயல்படுகிறார் - தெலுங்கானா முதல்வர் மீது குஷ்பு குற்றச்சாட்டு

Published On 2018-11-21 08:45 GMT   |   Update On 2018-11-21 08:57 GMT
தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் கமி‌ஷன் பேர்வழியாக செயல்படுகிறார் என்று நடிகை குஷ்பு குற்றம் சாட்டியுள்ளார். #Kushboo #ChandrashekarRao

ஐதராபாத்:

தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தல் வருகிற டிசம்பர் மாதம் 7-ந்தேதி நடக்கிறது. அங்கு தேர்தல் பிரசாரம் தீவிரமாக நடந்து வருகிறது.

சந்திரசேகரராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி மீண்டும் ஆட்சியை பிடிக்க தீவிமாக உள்ளது. காங்கிரஸ் கட்சி, தெலுங்கு தேசம், இந்திய கம்யூனிஸ்டு உள்பட 4 கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளது.

தெலுங்கானா சட்டசபை தேர்தலில் பிரசாரம் செய்வதற்காக காங்கிரஸ் செய்தி தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பு ஐதராபாத் சென்றார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

சந்திரசேகரராவ் தன்னை நவாப் (ராஜா ) என்று நினைத்து செயல்படுகிறார். பல 100 கோடி மதிப்பில் வீட்டை கட்டி உள்ளார். அங்கு ஏராளமான சொகுசு கார்கள் உள்ளன. அவரும், அவரது கட்சியும் கமி‌ஷன் மட்டுமே வாங்குவதில் ஆர்வமாக உள்ளனர்.

 


நாட்டிலேயே தலைமை செயலகத்துக்கு செல்லாமல் பண்ணை வீட்டிலேயே இருக்கும் ஒரே முதல்வர் சந்திரசேகரராவ்தான்.

கடந்த தேர்தலில் சந்திர சேகரராவ் அளித்த வாக்குறுதிகளில் ஒன்றை கூட நிறைவேற்றவில்லை. அவற்றை எல்லாம் குப்பை தொட்டியில் போட்டு விட்டார். அவரது அரசாங்கம் நியாயமற்ற நெறிமுறைகளை கடைபிடித்தது.

நக்சலைட்டு விவகாரத்தில் சரியாக கையாளவில்லை. போலி என்கவுண்டர் நடத்தியதற்கு சந்திர சேகரராவ் அரசாங்கமே பொறுப்பு. தெலுங்கானாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.

சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 11 பெண்களுக்கு போட்டியிட சீட் கொடுத்துள்ளது. ஆனால் சந்திரசேகராவ் கட்சி 3 பெண்களுக்கு மட்டுமே சீட்டு கொடுத்துள்ளது. அவரது அரசு பெண்களுக்கு எதிராக உள்ளது.

பெண்கள் வளர்ச்சி என்ற பெயரில் அவரது மகள் கவிதா வளர்ச்சி அடையவே திட்டங்களை கொண்டு வருகிறார். பாதுகாமா சரீஸ் என்ற பெயரில் ரூ.220 கோடி கொள்ளையடித்து உள்ளனர். ஒரு பெண் அமைச்சரை கூட நியமிக்காததற்கு சந்திர சேகரராவ் அரசு வெட்கப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். #Kushboo #ChandrashekarRao

Tags:    

Similar News