செய்திகள்

இறக்குமதி மணல் தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

Published On 2018-11-19 23:47 GMT   |   Update On 2018-11-19 23:47 GMT
தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று இறக்குமதி மணல் தொடர்பான வழக்கை அடுத்த மாதம் 7-ந்தேதிக்கு ஒத்திவைத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. #Tamilnadu #SupremeCourt
புதுடெல்லி:

மலேசியாவில் இருந்து சுமார் 55 ஆயிரம் டன் மணலை ‘ராமியா எண்டர்பிரைசஸ்’ என்ற தனியார் நிறுவனம் இறக்குமதி செய்து தூத்துக்குடி துறைமுகத்தில் வைத்துள்ளது. இதனை பிற மாநிலங்களுக்கு எடுத்துச்செல்ல தமிழக அரசு தடை விதித்தது. எனவே தமிழக அரசே அந்த மணலை கொள்முதல் செய்யக்கோரி, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

அப்போது தமிழக அரசு மணலை விலைகொடுத்து வாங்க ஒப்புதல் அளித்ததால், முழு தொகையையும் ஒரு வாரத்துக்குள் செலுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த வழக்கு கடந்த அக்டோபர் மாதம் 1-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது, மலேசிய மணல் விவகாரம் தொடர்பாக தமிழக அரசு தரப்பில் ரூ.10 கோடியே 56 லட்சத்துக்கான வரைவோலை நீதிபதிகளிடம் தாக்கல் செய்யப் பட்டது.

இதனையடுத்து நீதிபதிகள், தூத்துக்குடி துறைமுகத்தில் உள்ள இறக்குமதி மணலை விற்பனைக்காக வெளியே எடுத்துச்செல்ல தமிழக அரசுக்கு தூத்துக்குடி துறைமுக நிர்வாகம் அனுமதி அளிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தனர். வழக்கு விசாரணையை 6 வாரங் களுக்கு ஒத்திவைத்திருந்தனர்.

இந்த நிலையில் இந்த வழக்கு மீண்டும் சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, எஸ்.அப்துல் நசீர் ஆகியோரின் அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

விசாரணை துவங்கியதும் தமிழக அரசு தரப்பில் மூத்த வக்கீல் முகுல் ரோகத்கி ஆஜராகி தங்கள் தரப்பில் விரிவான இறுதி வாதங்களை முன்வைக்க மேலும் சிறிது அவகாசம் தேவை என நீதிபதிகளிடம் கோரிக்கை விடுத்தார்.

இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கின் மீதான இறுதி விசாரணையை அடுத்த மாதம்(டிசம்பர்) 7-ந்தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
Tags:    

Similar News