செய்திகள்

தமிழக போலீசார் மீது திகார் ஜெயில் கைதிகள் புகார்- டெல்லி ஐகோர்ட்டு நோட்டீஸ்

Published On 2018-11-14 05:28 GMT   |   Update On 2018-11-14 07:29 GMT
மனித உரிமையை மீறி தாக்கியதாக தமிழக போலீசார் மீது திகார் ஜெயில் கைதிகள் புகார் தெரிவித்ததை அடுத்து டெல்லி ஐகோர்ட்டு தமிழ்நாடு சிறப்பு படை அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. #DelhiHighCourt
புதுடெல்லி:

டெல்லியில் உள்ள திகார் ஜெயிலில் தமிழ்நாடு சிறப்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் தமிழக போலீசார் மீது திகார் ஜெயில் கைதிகள் மனித உரிமையை மீறி தாக்கியதாக புகார் செய்திருந்தனர்.

இது தொடர்பாக திகார் ஜெயிலில் மிக பாதுகாப்பு வார்டில் உள்ள 15 கைதிகள் தங்களை தமிழ்நாடு சிறப்பு போலீஸ் படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட போலீசார் தாக்கினர் என்றும், சோதனை என்ற பெயரில் அத்துமீறி நடப்பதாகவும், மனித கண்ணியம் இல்லாமல் நடந்து கொள்கிறார்கள் என்றும் கூறி கடிதம் எழுதி இருந்தார்கள்.

இதையடுத்து கைதிகள் கடிதத்தை அடிப்படையாக வைத்து டெல்லி ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நேற்று தலைமை நீதிபதி ராஜேந்திர மேனன், நீதிபதி வி.கே.ராவ் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், திகார் ஜெயில் கைதிகள் தாக்கப்பட்டது தொடர்பாக டெல்லி ஆம் ஆத்மி அரசின் விளக்கத்தை கேட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். மேலும் சிறைத்துறை இயக்குனர், தமிழ்நாடு சிறப்பு படை அதிகாரிகளுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

அடுத்த ஆண்டு ஜனவரி 14-ந்தேதிக்குள் விளக்கம் அளிக்கும்படி உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர். #DelhiHighCourt
Tags:    

Similar News