செய்திகள்

காஷ்மீரில் தர்பார் மாற்றம் - அரசு அலுவலகங்கள் நாளை முதல் ஜம்முவில் இயங்கும்

Published On 2018-11-04 16:05 IST   |   Update On 2018-11-04 16:05:00 IST
வெள்ளையர் ஆட்சிக்காலத்து மரபான தர்பார் மாற்றத்தின்படி காஷ்மீர் மாநிலத்தின் கவர்னர் மாளிகை, தலைமை செயலகம் மற்றும் அரசு அலுவலகங்கள் நாளை முதல் ஜம்முவில் இயங்கும். #DarbarMove #JKsecretariat
ஸ்ரீநகர்:

தமிழக அரசின் தலைமை செயலகம் தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் இயங்கி வருவதைப் போல் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநில தலைமை செயலகமும் அந்த மாநிலத்தின் தலைநகரில் இயங்கி வருகின்றன.

ஆனால், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் மட்டும் கோடை மற்றும் கடுங்குளிர் காலங்களில் தலைமை செயலகம் முறையே ஸ்ரீநகரிலும், ஜம்முவிலும் என இரு இடங்களில் இயங்கி வருகிறது.

இப்படி தலைமைச் செயலகத்தை மாற்றும் இந்த மாற்றமானது, தர்பார் மாற்றம் என்றழைக்கப்படும் இந்த வழக்கம் காஷ்மீரை குலாப் சிங் என்ற மன்னர் ஆட்சி செய்த 1872 முதல் கடந்த 146 ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தலைமை செயலகம் மட்டுமின்றி அம்மாநில கவர்னர் மாளிகையும் குளிர் மற்றும் கோடைக் காலங்களில் ஜம்முவிலும், ஸ்ரீநகரிலும் இயங்கும்.

குளிர்காலத்தில் ஸ்ரீநகரில் பனிப்பொழிவு கடுமையாக இருக்கும் என்பதால் அரசு ஊழியர்கள் சுமார் 5 ஆயிரம் பேர் மற்றும் முக்கிய கோப்புகளை ஜம்முவுக்கு இடமாற்றம் செய்யும் பணிகள் கடந்த 10 நாட்களாக நடைபெற்று வந்தது.

இதற்கு வசதியாக ஸ்ரீநகரில் இயங்கி வந்த மாநில தலைமை செயலகம் கடந்த மாதம் 26-ம் தேதி மூடப்பட்டது. ஸ்ரீநகரில் தங்கியிருந்த அரசுப் பணியாளர்களும் ஜம்முவுக்கு திரும்பத் தொடங்கினார்கள். 

இந்நிலையில், நாளை முதல் அம்மாநிலத்தின் தலைமைச் செயலகம் ஜம்முவில் இயங்கத் தொடங்கும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. நாளை முதல் இன்னும் 6 மாதத்திற்கு காஷ்மீரின் கவர்னர் மாளிகை, தலைமை செயலகம் மற்றும் அரசு அலுவலகங்கள் அனைத்தும் ஜம்முவில் இயங்கும். #DarbarMove #JKsecretariat 
Tags:    

Similar News