செய்திகள்

சி.பி.ஐ. சிறப்பு இயக்குனர் அஸ்தானா வழக்கு - சி.பி.ஐ. பதிலளிக்க நவ.1ம் தேதி வரை அவகாசம்

Published On 2018-10-29 10:36 GMT   |   Update On 2018-10-29 10:36 GMT
சி.பி.ஐ. சிறப்பு இயக்குனர் அஸ்தானா வழக்கில், நவம்பர் ஒன்றாம் தேதிக்குள் சி.பி.ஐ. பதிலளிக்க வேண்டும் என அவகாசம் அளித்து டெல்லி ஐகோர்ட்டு இன்று உத்தரவிட்டது. #CBI #CBISpecialDirector #RakeshAsthana #DelhiHighCourt
புதுடெல்லி:

ஐதராபாத்தை சேர்ந்த தொழிலதிபர் சதீஷ் சனா சி.பி.ஐ.யிடம் ஒரு புகார் அளித்தார். இறைச்சி ஏற்றுமதியாளர் மொயின் குரேஷி மீதான சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் இருந்து தன்னை விடுவிப்பதற்கு இடைத்தரகர் மூலம் சி.பி.ஐ. சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா ரூ.5 கோடி லஞ்சம் பெற்றார் எனக்கூறி உள்ளார்.

அந்தப் புகாரின்பேரில் ராகேஷ் அஸ்தானா, துணை போலீஸ் சூப்பிரண்டு தேவேந்தர் குமார், மனோஜ் பிரசாத், சோமேஷ் பிரசாத் உள்ளிட்டவர்கள் மீது சி.பி.ஐ வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் தேவேந்தர் குமாரை சி.பி.ஐ. கைதுசெய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தியது. அவரை 7 நாட்கள் சி.பி.ஐ. காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டது.



இதற்கிடையே, சி.பி.ஐ. சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா, டெல்லி ஐகோர்ட்டில் தன் மீதான வழக்குக்கு எதிராக ஒரு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், கைது செய்வதில் இருந்து தனக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் கூறி இருந்தார். கைது செய்யப்பட்டுள்ள தேவேந்தர் குமார் தரப்பிலும், அவர் மீதான வழக்குக்கு எதிராக டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுக்களை நீதிபதி நஜ்மி வாஜிரி விசாரித்தார். அடுத்த கட்ட விசாரணையை நீதிபதி நஜ்மி வாஜிரி 29-ந் தேதிக்கு ஒத்திவைத்தார். 

இந்நிலையில், இந்த வழக்கு டெல்லி ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி நஜ்மி வாஜிரி, சிபிஐ சிறப்பு இயக்குநர் அஸ்தானா வழக்கில் சிபிஐ பதிலளிக்க நவம்பர் ஒன்றாம் தேதி வரை அவகாசம் அளித்து உத்தரவிட்டார். #CBI #CBISpecialDirector #RakeshAsthana #DelhiHighCourt
Tags:    

Similar News