செய்திகள்
செல்போன் தகராறால் விபரீதம் - துப்பாக்கியால் சுட்டு சிறுவன் தற்கொலை
செல்போனால் ஏற்பட்ட தகராறில் சிறுவன் ஒருவன் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டது டெல்லியில் சோகத்தை ஏற்படுத்தியது.
புதுடெல்லி:
தலைநகர் டெல்லியில் அமைந்துள்ள துவாரகா பகுதியின் பிந்தாபூர் என்னும் இடத்தில் வசிப்பவர் ரன்பீர் சிங். இவரது மகன் குல்ஷன் (17).
நேற்று முன்தினம் இரவு செல்போன் பிரச்சினை தொடர்பாக குல்ஷன் தனது சகோதரியுடன் தகராறில் ஈடுபட்டான். பிறகு சகோதரியின் செல்போனை அடித்து நொறுக்கி விட்டு வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டான்.
இத்ற்கிடையே, நேற்று காலை 6.15 மணி அளவில் குல்ஷன் வீடு திரும்பினான். சிறிது நேரம் கழித்து வீட்டின் முன்பாக கழுத்தில் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்தான்.
இதைக் கண்ட அவனது குடும்பத்தினர் உடனே அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எனினும் வழியிலேயே அவன் பரிதாபமாக உயிர் இழந்தான்.
இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். விசாரணையில் குல்ஷன் கைத்துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், சிறுவன் தனது கழுத்தின் மீது துப்பாக்கியை அழுத்தி வைத்து சுட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறான். அவன் பயன்படுத்திய நாட்டு கைத்துப்பாக்கியும், பயன்படுத்தப்படாத 4 தோட்டாக்களும் கைப்பற்றப்பட்டன என தெரிவித்தனர்.
செல்போன் தொடர்பாக சகோதரியுடன் ஏற்பட்ட தகராறில் சிறுவன் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #Tamilnews