ஆந்திர மந்திரி கல்வி நிறுவனத்தில் வருமான வரி சோதனை
நகரி:
ஆந்திராவில் முதல்- மந்திரி சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் மந்திரி சபையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை மந்திரியாக இருப்பவர் பொன்குரு. நாராயணா.
கல்வியாளரான இவர் நாராயணா குரூப் கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறார். ஆந்திரா மட்டும் அல்லாது தமிழ்நாடு, கர்நாடகாவிலும் இந்த கல்வி நிறுவனம் சார்பில் மொத்தம் 200 பள்ளிகள், 400 இளநிலை கல்லூரிகள், 25 முதுநிலை கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது.
இன்று காலை இந்த கல்வி நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள். ஐதராபாத்தில் விஜயவாடா உள்பட ஆந்திராவின் முக்கிய நகரங்களில் சோதனை நடந்ததாகவும் 90 அதிகாரிகள் குழு இதில் ஈடுபட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சோதனை நடந்த போது மந்திரி பொன்குரு நாராயணா நெல்லூரில் இருந்தார். அவரிடம் இதுகுறித்து கேட்டபோது வருமானவரி சோதனை எதுவும் நடைபெறவில்லை, இதுபற்றி விஜயவாடாவில் உள்ள பள்ளி நிர்வாகிகளிடம் விசாரித்தேன். அவர்கள் சோதனை நடைபெறவில்லை என்று தன்னிடம் கூறியதாக தெரிவித்தார்.
இதேபோல் விஜயவாடாவில் உள்ள தெலுங்கு தேசம் கட்சி பிரமுகர்களுக்கு சொந்தமான 2 கட்டுமான நிறுவனங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். இவர்கள் ரெயில்வே காண்டிராக்டர்களாகவும் இருந்து வருகிறார்கள். #Andhraminister #IncomeTax