செய்திகள் (Tamil News)

காஷ்மீரில் துப்பாக்கி சண்டை: 3 பயங்கரவாதிகள் பலி

Published On 2018-09-27 22:20 GMT   |   Update On 2018-09-27 22:20 GMT
காஷ்மீரில் நிகழ்ந்த துப்பாக்கி சண்டையில் ராணுவவீரர்கள் 3 பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்றனர். #JKEncounter #MilitantKilled
ஸ்ரீநகர்:

காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டம் தூரு சாகாபாத் என்கிற இடத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் சிறப்பு அதிரடிப்படை போலீசார் மற்றும் ராணுவ வீரர்கள் அங்கு விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் இறங்கினர்.

அப்போது அங்கு பதுங்கி இருந்த 2 பயங்கரவாதிகளை போலீசார் மற்றும் ராணுவ வீரர்கள் சுற்றிவளைத்தனர். அவர்களை தங்களிடம் சரணடைந்துவிடும் படி போலீசார் எச்சரித்தனர். மாறாக பயங்கரவாதிகள், போலீசார் மற்றும் ராணுவ வீரர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.



இதில் 3 ராணுவ வீரர்களின் உடலை துப்பாக்கி குண்டுகள் துளைத்தன. ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர்களை சக வீரர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதனை தொடர்ந்து ராணுவவீரர்கள் தங்களுடைய துப்பாக்கிகளால் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்தனர்.

இதில் ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டார். மற்றொரு பயங்கரவாதி அங்கிருந்து தப்பி ஓடினார். இதற்கிடையே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வந்த 3 ராணுவ வீரர்களில் ஒருவர் சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக இறந்தார்.

இதே போல் புட்காம் மாவட்டம் பான்சான் என்கிற கிராமத்தில் மசூதி ஒன்றுக்குள் பதுங்கி இருந்த பயங்கரவாதிகளை ராணுவவீரர்கள் சுற்றிவளைத்தபோது இரு தரப்புக்கும் இடையே துப்பாக்கி சண்டை மூண்டது. அப்போது ராணுவ வீரர்கள் சுட்டதில் பயங்கரவாதிகள் 2 பேர் உயிர் இழந்தனர்.

மற்றொரு சம்பவமாக தலைநகர் ஸ்ரீநகரில் நூர்பாக் என்கிற இடத்தில் பயங்கரவாதிகளை பிடிப்பதற்கான தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த ராணுவவீரர்கள் அங்கு துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் அந்த பகுதியை சேர்ந்த 24 வயது வாலிபர் ஒருவர் துப்பாக்கி குண்டு பாய்ந்து இறந்தார்.

இதனையடுத்து, தேவையற்ற வதந்திகள் பரப்பப்படுவதை தடுக்கும் வகையில் அனந்த்நாக் மற்றும் ஸ்ரீநகரில் செல்போன் இணைய சேவை தற்காலிகமாக துண்டிக்கப்பட்டது. #JKEncounter #MilitantKilled
Tags:    

Similar News