செய்திகள்

நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள ஏர் இந்தியாவுக்கு மத்திய அரசு ரூ.2 ஆயிரம் கோடி உத்தரவாத கடன்

Published On 2018-09-04 10:05 GMT   |   Update On 2018-09-04 10:05 GMT
கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள ஏர் இந்தியா நிறுவனத்திற்கு மத்திய அரசு ரூ.2100 கோடியை உத்தரவாத கடனாக அளித்துள்ளது. #AirIndia
புதுடெல்லி:

இந்தியாவில் முதல்முறையாக விமான சேவை நிறுவனத்தை டாடா குழுமம் தான் தொடங்கியது. பின்னர் 1953-ம் ஆண்டில் மத்திய அரசால் அந்நிறுவனம் கையகப்படுத்தப்பட்டு, ஏர் இந்தியா என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. நாட்டின் மூன்றாவது பெரிய விமான நிறுவனமாக உள்ள ஏர் இந்தியா, கடந்த சில ஆண்டுகளாக கடும் நஷ்டத்தில் இயங்கிவருகிறது.

பெருகி வரும் நிர்வாக செலவுகள், லாபமற்ற வர்த்தக நடைமுறைகள் ஆகியவற்றால் சுமார் 52000 கோடி ரூபாய் கடன் நெருக்கடியில் ஏர் இந்தியா சிக்கியுள்ளது. இதனால், இந்நிறுவனத்தை மீண்டும் தனியார் வசம் ஒப்படைக்க மத்திய அரசு முடிவு செய்தது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். மத்திய அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏர் இந்தியா நிறுவனத்தில் பணியாற்றி வருபவர்கள் வேலைநிறுத்த போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

ஆனால், ஏர் இந்தியா நிறுவனத்தை தனியார்மயமாக்கும் மத்திய அரசின் முடிவில் எந்த மாற்றமும் இல்லை என விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் உறுதியாக தெரிவித்தது.  ஏர் இந்தியா நிறுவனத்தின் 76 சதவிகித பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்து தனியார் மயமாக்க மத்திய அரசு முடிவெடுத்தது. 

இதேபோல ஏர் இந்தியா சாட்ஸ் ஏர்போர்ட் சர்வீசஸ் நிறுவனத்தில் 50% பங்குகளை விலக்கிக்கொள்வது தொடர்பான விளக்க அறிக்கையினையும் மத்திய அரசு வெளியிட்டது. ஏர் இந்தியாவில் மத்திய அரசின் வசமுள்ள பங்குகளை வாங்க டாடா குழுமம், இண்டிகோ விமான நிறுவனம் ஆகியன முயற்சித்தன.

ஆனால், அந்த முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை.  காலெக்கெடு முடிந்த நிலையிலும் யாரும் பங்குகளை வாங்க முன்வராததால் மத்திய அரசே கடன்களை சுமக்கும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில், ரூ.2100 கோடியை மத்திய அரசு ஏர் இந்தியா நிறுவனத்திற்கு உத்தரவாத கடனாக அளித்துள்ளது. 
Tags:    

Similar News