செய்திகள்
ராணுவ ஆராய்ச்சி, மேம்பாட்டு நிறுவனத்தின் தலைவராக சத்தீஷ் ரெட்டி நியமனம்
இந்திய பாதுகாப்புத்துறையின் ஆராய்ச்சி, மேம்பாட்டு நிறுவனத்தின் தலைவராக சத்தீஷ் ரெட்டி இன்று நியமனம் செய்யப்பட்டார். #DRDO #DRDOchairman
புதுடெல்லி:
இந்திய பாதுகாப்புத்துறையின் ஆராய்ச்சி, மேம்பாட்டு நிறுவனமான டி.ஆர்.டி.ஓ. நாட்டின் முப்படைகளுக்கு தேவையான ஆயுதங்கள் உள்ளிட்ட உபகரணங்கள் தொடர்பாக மத்திய அரசுக்கு ஆலோசனைகளை வழங்கி செயல்படுத்தி வருகிறது. அதிநவீன ஆயுதங்களை உள்நாட்டில் உருவாக்குவது தொடர்பான திட்டங்கள் குறித்தும் ஆராய்ந்து வருகிறது.
இந்நிறுவனத்தின் தலைவராக இருந்த எஸ்.கிறிஸ்டோபர் என்பவரது பதவிக்காலம் கடந்த மே மாதம் 28-ம் தேதியுடன் நிறைவடைந்தது. இதைதொடர்ந்து, பாதுகாப்பு துறை செயலாளர் சஞ்சய் மித்ரா, கூடுதல் பொறுப்பாக தலைவர் பணிகளை கவனித்து வந்தார்.
இந்நிலையில், பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமனின் அறிவியல் ஆலோசகர் சத்தீஷ் ரெட்டி இந்த பணியில் நியமனம் செய்யப்பட்டதாக மத்திய அரசு இன்று வெளியிட்ட செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாண்டுகள் இந்த பதவியை வகிக்கும் சத்தீஷ் ரெட்டி, இந்நிறுவனத்தில் செயலாளராகவும் இருப்பார் என அரசு வெளியிட்ட உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. #DRDO #DRDOchairman