செய்திகள்

காஷ்மீர் - மலைச்சரிவில் உருண்டு ஆற்றுக்குள் கார் கவிழ்ந்த விபத்தில் 12 யாத்ரீகர்கள் பலி

Published On 2018-08-21 10:05 GMT   |   Update On 2018-08-21 10:05 GMT
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இன்று யாத்ரீகர்கள் சென்ற கார் மலைச்சரிவில் உருண்டு ஆற்றுக்குள் கவிழ்ந்த விபத்தில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். #MachailYatra
ஜம்மு:

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள குல்பர்கா பகுதியில் பிரசித்தி பெற்ற மச்சைல் மாட்டா யாத்திரை நடைபெற்று வருகிறது. இந்த யாத்திரையில் பங்கேற்பதற்காக அம்மாநிலத்தின் தொலைதூரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் வாகனங்களில் சென்றவண்ணம் உள்ளனர்.

இந்நிலையில், குல்பர்கா நோக்கி சுமார் 15 யாத்ரீகர்களுடன் சென்ற வாடகை கார், இன்று காலை கிஷ்த்வார் மாவட்டத்துக்குட்பட்ட சாலை வழியாக வந்து கொண்டிருந்தது.

டூல் என்னும் இடத்தில் ஒரு குறுகிய வளைவில் திரும்பியபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையின் பக்கவாட்டில் இருந்து மலைச்சரிவில் உருண்டு கீழே ஓடும் செனாப் ஆற்றுக்குள் விழுந்தது.



இந்த கோர விபத்தில் காரில் இருந்த 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.  ஒரு குழந்தை உள்பட இருவர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அருகாமையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று இதே கிஷ்த்வார் மாவட்டம் வழியாக மச்சைல் யாத்திரைக்கு சென்ற வாகனங்களின் மீது மலைப்பாறைகள் உருண்ட விபத்தில் 7 பேர் பலியானது நினைவிருக்கலாம்.  #MachailYatra 
Tags:    

Similar News