செய்திகள்

ஆண்டுக்கு ஒரு சைக்கிள்- கேரளாவுக்காக தனது சேமிப்பை கொடுத்த சிறுமிக்கு ஹீரோ கவுரவம்

Published On 2018-08-20 14:40 GMT   |   Update On 2018-08-20 14:40 GMT
சைக்கிள் வாங்குவதற்காக சேமித்த தனது உண்டியல் பணத்தை கேரள வெள்ள நிவாரணத்திற்காக வழங்கிய விழுப்புரம் சிறுமிக்கு, ஒவ்வொரு பிறந்தநாளிலும் ஒரு சைக்கிள் கொடுப்போம் என ஹீரோ நிறுவனம் அறிவித்துள்ளது. #KeralaFlood #HeroCycles

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த அனுப்பிரியா என்ற ஒன்பது வயது சிறுமி, சைக்கிள் வாங்குவதற்காக கடந்த 4 ஆண்டுகளாக உண்டியல் பணம் சேமித்து வந்துள்ளார். கேரளாவில் மழை வெள்ள பாதிப்பை டிவியில் பார்த்ததும், தனது 9 ஆயிரம் ரூபாய் சேமிப்பை நிவாரண நிதியாக வழங்கினார் அனுப்பிரியா.

இந்த செய்தி அனைவரையும் நெகிழ்ச்சிக்கு உள்ளாக்கியது. சிறுமியின் இச்செயலைக் கேள்விப்பட்ட முன்னணி சைக்கிள் தயாரிப்பு நிறுவனமான ஹீரோ சைக்கிள்ஸ், அனுப்ரியாவுக்குப் புத்தம் புதிய சைக்கிளை வழங்கத் தயார் என்று ட்விட்டரில் அறிவித்தது.

ஹீரோ சைக்கிள்ஸ் நிறுவனத்தின் தலைவர் பங்கஜ் முஞ்சால் தனது ட்விட்டர் பக்கத்தில், “அனுப்ரியா! உன்னை வணங்குகிறேன், நீ ஒரு நல்ல உள்ளம் படைத்தவள். மேலும் நன்மையைப் பரப்புவாயாக. உனக்கு உன் வாழ்வின் ஒவ்வோர் ஆண்டும் ஒரு புதிய சைக்கிள் வழங்குவதில் ஹீரோ மகிழ்ச்சியடைகிறது. முகவரியை எம்மோடு பகிர்ந்துகொள்க. உனக்கு எனது அன்பும் வாழ்த்துகளும். கேரளாவுக்காகப் பிரார்த்திக்கிறேன்” என்று நெகிழ்ச்சியுடன் ட்வீட் செய்துள்ளார். 



மேலும், “தனது சேமிப்பு மொத்தத்தையும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்காக வழங்கிய ஒன்பது வயது சிறுமிக்கு சைக்கிளை அளித்த ஹீரோ நிறுவனத்துக்கு நன்றி” என்று காங்கிரஸ் எம்.பி சசி தரூர் ட்வீட் செய்துள்ளார்.
Tags:    

Similar News