செய்திகள்

எல்லைப்பகுதி வழியாக இன்று இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற பாக். பயங்கரவாதி கொல்லப்பட்டான்

Published On 2018-08-19 10:04 GMT   |   Update On 2018-08-19 10:04 GMT
பாகிஸ்தான் ஆக்கிரமித்து வைத்துள்ள காஷ்மீர் எல்லைப்பகுதி வழியாக இன்று இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற பயங்கரவாதியை பாதுகாப்பு படையினர் இன்று சுட்டுக் கொன்றனர்.
ஸ்ரீநகர்:

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், பாரமுல்லா மாவட்டத்தில் பாகிஸ்தான் ஆக்கிரமித்து வைத்துள்ள காஷ்மீர் எல்லைக்கோட்டுப் பகுதியில் உள்ள கஸ்தூரி நார் எல்லைப்பகுதியில் இன்று இந்திய ராணுவம் மற்றும் எல்லை பாதுகாப்பு படையினர் வழக்கம்போல் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, பாகிஸ்தான் ஆக்கிரமித்து வைத்துள்ள காஷ்மீர் பகுதியில் இருந்து சிலர் இந்திய பகுதிக்குள் ஊடுருவ முயன்றனர். இதை கவனித்துவிட்ட இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் அவர்களை திரும்பிப் போகும்படி எச்சரித்தனர்.

அந்த எச்சரிக்கையை பொருட்படுத்தாத பயங்கரவாதிகள் துப்பாக்கிகளால் சுட்டவாறு பாதுகாப்பு படையினரை நோக்கி  முன்னேறி வந்தனர். பாதுகாப்பு படை வீரர்களும் எதிர்தாக்குதல் நடத்தினர்.

இருதரப்புக்கும் இடையிலான துப்பாக்கிச் சண்டையில் இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் பயங்கரவாதிகளில் ஒருவனை இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். தொடர்ந்து அங்கு துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருவதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

குப்வாரா மாவட்டத்தில் உள்ள தங்டார் எல்லைக்கோட்டு பகுதி வழியாக நேற்று இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகளை இந்திய படையினர் சுட்டுக்கொன்றது நினைவிருக்கலாம். #Baramulla #Infiltrationbid
Tags:    

Similar News