செய்திகள்

மகாராஷ்டிராவில் மராத்தா சமூக அமைப்புகள் பந்த் - 4 மாவட்டங்களில் போக்குவரத்து பாதிப்பு

Published On 2018-08-09 05:16 GMT   |   Update On 2018-08-09 05:16 GMT
மகாராஷ்டிர மாநிலத்தில் மராத்தா சமூக அமைப்புகள் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்தி வருவதால் 4 மாவட்டங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. #MarathaProtest #MaharashtraBandh
புனே:

மகாராஷ்டிர மாநிலத்தில் அரசுப் பணி மற்றும் கல்வியில் இடஒதுக்கீடு கேட்டு மராத்தா சமூகத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். மராத்தா கிரந்தி மோர்ச்சா உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் ஏற்கனவே முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.

அப்போது போலீஸ் பாதுகாப்பையும் மீறி, போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இதனால் மும்பை மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு இடங்களில் வன்முறை வேகமாக பரவியது. வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. அரசு பேருந்துகள் சேதப்படுத்தப்பட்டன.

வன்முறை தீவிரமடைந்ததால், முழு அடைப்பு போராட்டத்தை திரும்ப பெறுவதாக மராத்தா தலைவர்கள் அறிவித்தனர். தங்கள் போராட்டம் வெற்றி அடைந்துள்ளதாக தெரிவித்தனர்.

இந்நிலையில், இடஒதுக்கீடு கேட்டு மராத்தா கிரந்தி மோர்ச்சா உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் மகாராஷ்டிராவில் இன்று முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி இன்று பல்வேறு பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. மராத்தா சமூகத்தினர் ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகின்றனர். குறிப்பாக லத்தூர், ஜல்னா, சோலாப்பூர் மற்றும் புல்தானா மாவட்டங்களில் போராட்டங்கள் காரணமாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.



முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புனே உள்ளிட்ட முக்கிய நகரங்களில் அரசுப் பேருந்துகள், வாடகைக்கார்கள், சரக்கு வாகனங்கள் இயக்கப்படவில்லை. இதன் காரணமாக பேருந்து நிலையங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. இதேபோல் வன்முறைகள் பரவாமல் தடுக்கும் வகையில் புனேயின் சில பகுதிகளில்  இன்டர்செட் சேவை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. ஆனால், மும்பையில் வழக்கம்போல் வாகனங்கள் இயங்குகின்றன.

முழு அடைப்பை ஒட்டி மாநிலத்தில் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது. சிஐஎஸ்எப் மற்றும் எஸ்ஆர்பிஎப் படைவீரர்கள் உள்பட பலர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். #MarathaProtest #MaharashtraBandh #MarathaKrantiMorcha #MarathaReservation
Tags:    

Similar News