செய்திகள்

ஏர்செல் மேக்சிஸ் வழக்கு - ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய தடை நீட்டிப்பு

Published On 2018-08-07 06:47 GMT   |   Update On 2018-08-07 06:47 GMT
ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்வதற்கு விதிக்கப்பட்ட தடை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. #KartiChidambaram #AircelMaxisCase
புதுடெல்லி:

2006-ம் ஆண்டு ப.சிதம்பரம் மத்திய நிதி அமைச்சராக இருந்தார். இந்த காலகட்டத்தில், மலேசியாவை சேர்ந்த மேக்சிஸ் நிறுவனம், ஏர்செல் நிறுவனத்தில் ரூ.3 ஆயிரத்து 500 கோடி முதலீடு செய்தது. இதுகுறித்து சர்ச்சை எழுந்தது.

பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழுவின் அனுமதி பெறாமல் இந்த முதலீடு செய்யப்பட்டதாகவும், இதற்கு ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான நிறுவனம் உதவியது என்று குற்றச்சாட்டு கூறப்பட்டது. இதன் அடிப்படையில் அமலாக்க துறையும், சி.பி.ஐ.யும் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன.



இந்த வழக்கில் விசாரணை அமைப்புகளின் பிடி இறுகிய நிலையில், ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோர் முன்ஜாமீன் கேட்டு டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோரை கைது செய்ய தடை விதித்தது. கடைசியாக நடந்த விசாரணையின்போது, ஆகஸ்டு 7-ந்தேதி வரை தடையை நீட்டித்து நீதிபதி ஓ.பி.சைனி உத்தரவிட்டார்.

இந்நிலையில், முன்ஜாமீன் வழக்குகள் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இருவருக்கும் முன்ஜாமீன் வழங்குவது குறித்து எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. ஆனால், அக்டோபர் 8-ம் தேதி வரை ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய தடையை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். #KartiChidambaram #AircelMaxisCase

Tags:    

Similar News