செய்திகள்
அசாம் என்.ஆர்.சி. விவகாரம் தொடர்பாக மக்களிடம் பயத்தை ஏற்படுத்துவது கண்டனத்துக்குரியது - ராஜ்நாத் சிங்
அசாம் குடிமக்கள் பதிவேடு தொடர்பாக பொதுமக்களிடம் பயத்தை உருவாக்கும் செயல் கடும் கண்டனத்துக்கு உரியது என உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் மாநிலங்களவையில் இன்று தெரிவித்தார். #MonsoonSession #NRCBill #RajnathSingh
புதுடெல்லி:
அசாம் மாநிலத்தில் வசிப்போர் குறித்த தேசிய குடிமக்கள் இறுதி வரைவு பதிவேடு சமீபத்தில் வெளியிடப்பட்டது.
இந்த பதிவேட்டில் சுமார் 40 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்பட்டு உள்ளதற்கு காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன.
இந்த விவகாரம் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் கடும் அமளியை ஏற்படுத்தியது. மாநிலங்களவை கடந்த இரு தினங்களாக ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் மாநிலங்களவையில் இன்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
அசாம் குடியுரிமை பட்டியல் தொடர்பான பணிகள், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது 1985ம் ஆண்டு தொடங்கியது. மன்மோகன் சிங் பிரதமராக பதவி வகித்தபோது இது தொடர்பான பணிகள் நடைபெற்று வந்தன.
இதுதொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் சுப்ரீம் கோர்ட் கண்காணிப்பின் கீழ் நடந்து வருகிறது. இப்போது வெளியிடப்பட்டுள்ள இந்த பட்டியல் இறுதியானதல்ல. ஒவ்வொருவருக்கும் மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படும்.
இந்த விவகாரம் தொடர்பாக தேவையற்ற குற்றச்சாட்டுகளை கூறுவது துரதிர்ஷ்டவசமானது. அசாம் குடிமக்கள் பதிவேடு தொடர்பாக பொதுமக்களிடம் பயத்தை உருவாக்கும் செயல் கடும் கண்டனத்துக்கு உரியது என தெரிவித்துள்ளார். #MonsoonSession #NRCBill #RajnathSingh