செய்திகள்

மராத்தா இட ஒதுக்கீட்டு கோரிக்கைக்காக மேலும் ஒருவர் தற்கொலை

Published On 2018-08-03 04:55 GMT   |   Update On 2018-08-03 04:55 GMT
மகாராஷ்டிராவில் மராத்தா இடஒதுக்கீட்டு கோரிக்கைக்காக மேலும் ஒருவர் தற்கொலை செய்ததையடுத்து, போராட்டக்காரர்களிடையே கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. #MarathaReservation #MarathaQuotaStir
மும்பை:

மகாராஷ்டிர மாநிலத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு கேட்டு மராத்தா சமூகத்தினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டங்களின்போது பல்வேறு பகுதிகளில் வன்முறைச் சம்பவங்களும் நடந்தேறின. இடஒதுக்கீட்டு கோரிக்கைக்காக சிலர் உயிரையும் மாய்த்துள்ளனர்.

இந்நிலையில், அவுரங்காபாத்தின் சவுத்ரி காலனியைச் சேர்ந்த உமேஷ் ஆத்மராம் இந்தாயித் (வயது 21) என்ற வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். தற்கொலைக்கு முன்னதாக அவர் எழுதிய கடிதம் கிடைத்துள்ளது. அதில், பி.எஸ்சி. படித்தும் மராத்தா சமூகத்தைச் சேர்ந்தவன் என்பதால் தனக்கு வேலை கிடைக்கவில்லை என்றும், பெற்றோரின் கனவுகளை நிறைவேற்ற முடியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.



வாலிபர் இந்தாயித்தின் தற்கொலைக் குறிப்பு சமூக வலைத்தளங்களில் பரவியதையடுத்து, நூற்றுக்கணக்கான இளைஞர்கள் ஜல்னா சாலையில் ஒன்றுதிரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். சிலர் சாலையை மறித்ததுடன், கற்களை வீசியும் தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

கடந்த இரண்டு வாரங்களில்  மட்டும் மராத்தா இடஒதுக்கீட்டு கோரிக்கைக்காக 6 பேர் தற்கொலை செய்துள்ளனர். #MarathaReservation #MarathaQuotaStir

Tags:    

Similar News