செய்திகள்

பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலை - மேலும் ஒருவர் கைது

Published On 2018-07-25 06:19 GMT   |   Update On 2018-07-25 06:19 GMT
பெங்களூரு நகரில் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட மூத்த பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெங்களூரு:

பெங்களூரு ராஜ ராஜேஸ்வரி நகரில் மூத்த பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் 5-ந்தேதி துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டார். நாட்டையே உலுக்கிய இந்த கொலை வழக்கை கர்நாடக மாநில சிறப்பு புலனாய்வுப் படை (எஸ்.ஐ.டி.) விசாரித்து வருகிறது.

இது தொடர்பாக பரசுராம் வாக்மோரே, நவீன்குமார், அமோக்காலே, அமித்தேக்வேகர், சுஜித் குமார், மனோகர்எடவே, மோகன் நாயக் உள்பட 9 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஹூப்பள்ளியை சேர்ந்த அமித் ராகவேந்திரபட்டி, கணேஷ்மிஸ்கி ஆகியோரை கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று சிறப்பு புலனாய்வு படை போலீசார் கைது செய்தனர்.

கைதான அமித் ராகவேந்தரபட்டி தங்க நகை செய்யும் தொழிலாளி ஆவார். கணேஷ் மிஸ்கி ஊதுவத்தி தயாரித்து விற்பனை செய்து வந்தார். இவர்கள் 2 பேரையும் போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வருகிறார்கள்.

அடுத்த மாதம் 6-ந்தேதி வரை இவர்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்கப்பட உள்ளனர். இவர்கள் 2 பேர்தான் கவுரி லங்கேஷ் இருப்பிடத்தை நோட்டமிட்டு கொலை கும்பலுக்கு தகவல் தெரிவித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இதில் கவுரி லங்கேஷை துப்பாக்கியால் சுட்டது பரசுராம் வாக்மோரே என்று போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்து உள்ளது.

மேலும் இந்த கொலை தொடர்பாக மடிகேரி பகுதியில் ராஜேஷ் (வயது 50) என்பவரை போலீசார் கைது செய்து உள்ளனர்.
Tags:    

Similar News