செய்திகள்

ஏர்செல் மேக்சிஸ் வழக்கு - சிதம்பரத்தை கைது செய்ய ஆகஸ்ட் 7-ம் தேதி வரை தடை நீட்டிப்பு

Published On 2018-07-23 09:30 GMT   |   Update On 2018-07-23 09:30 GMT
ஏர்செல் மேக்சிஸ் தொடர்பாக சிபிஐ தொடர்ந்த வழக்கில் ப.சிதம்பரத்தை ஆகஸ்ட் 7-ம் தேதி வரை கைது செய்வதற்கு தடை விதித்து டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #AircelMaxisCase #PChidambaram
புதுடெல்லி:

மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தபோது, ஏர்செல் நிறுவன பங்குகள் சட்டவிரோதமாக மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்பனை செய்யப்பட்டதாகவும், இதன்மூலம் கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனம் பலன் அடைந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.



இதில் அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கில் தங்களை கைது செய்யக்கூடாது என ஏற்கெனவே ப.சிதம்பரமும், கார்த்தி சிதம்பரமும் டெல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இருவரையும் கைது செய்ய விதிக்கப்பட்ட தடையை ஆகஸ்ட் 7-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டிருந்தது.

இதற்கிடையே ஏர்செல்-மேக்சிஸ் வழக்கை விசாரித்து வரும் சி.பி.ஐ., சமீபத்தில் கூடுதல் குற்றப்பத்திரிகையை டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதில் கார்த்தி சிதம்பரத்துடன், முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் பெயரும் சேர்க்கப்பட்டிருந்தது.  எனவே அவர் விசாரணைக்கு அழைக்கப்பட்டு கைது செய்யப்படும் சூழல் உருவாகி உள்ளது.

இதையடுத்து ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் தன்னை கைது செய்யாமல் இருக்க, டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் இன்று ப.சிதம்பரம் சார்பில் முன்ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு இன்று பிற்பகல் விசாரணைக்கு வந்தது. அப்போது,  ப.சிதம்பரத்தை ஆகஸ்ட் 7-ம் தேதி வரை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. #AircelMaxisCase #PChidambaram
Tags:    

Similar News