செய்திகள்

ருவாண்டா, உகாண்டா, தென்னாப்பிரிக்கா நாடுகளுக்கு பிரதமர் மோடி நாளை பயணம்

Published On 2018-07-22 10:29 GMT   |   Update On 2018-07-22 10:29 GMT
பிரிக்ஸ் உச்சி மாட்டில் பங்கேற்பதற்காக தென்னாப்பிரிக்கா செல்லும் பிரதமர் மோடி வழியில் ருவாண்டா, உகாண்டா நாடுகளின் அதிபர்களை சந்திக்கிறார். #ModiRwandavisit #ModiUgandavisit
புதுடெல்லி:

ஜூலை 25-ம் தேதி தொடங்கும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தென்னாப்பிரிக்கா புறப்பட்டு செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான ருவாண்டா நாட்டுக்கு நாளை (திங்கட்கிழமை) செல்கிறார். 

ருவாண்டா அதிபர் பால் ககாமே உள்ளிட்ட தலைவர்களை அவர் சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். ருவாண்டா அதிபரின் தேசிய சமூக பாதுகாப்பு திட்டத்தின்கீழ் ‘வீட்டுக்கு ஒரு பசு’ திட்ட விழாவில் அவர் கலந்து கொள்கிறார்.

அந்நாட்டின் பாரம்பரிய மரபுகளின்படி, பசு மாடுகளை பரிசாக அளித்து அன்பை ஏற்படுத்தி கொள்வது வழக்கம். அவ்வகையில் இந்தியாவில் இருந்து கொண்டு செல்லப்படும் 200 பசு மாடுகளை ருவாண்டா விவசாயிகளுக்கு பிரதமர் மோடி பரிசாக அளிக்கிறார். பின்னர் 24-ம் தேதி உகாண்டா நாட்டுக்கு செல்கிறார்.

சுமார் 20 ஆண்டுகளுக்கு பின்னர் உகாண்டாவுக்கு வரும் முதல் இந்திய தலைவரான மோடிக்கு எண்ட்டேபி நகரில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் உகாண்டா அதிபர் யோவேரி முசெவேனி விருந்து அளிக்கிறார். உகாண்டா பாராளுமன்றத்தில் சிறப்புரையாற்றும் அவர் அங்கிருந்து ஜோஹனஸ்பர்க் நகருக்கு சென்று 25-ம் தேதி தொடங்கும் உச்சி மாநாட்டில் கலந்து கொள்கிறார். #ModiRwandavisit #ModiUgandavisit 
Tags:    

Similar News