செய்திகள்
ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் சிதம்பரம் பெயரை சேர்த்து சிபிஐ புதிய குற்றப்பத்திரிகை தாக்கல்
ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன்னாள் நிதி மந்திரி சிதம்பரம் பெயரை சேர்த்து சிபிஐ புதிய குற்றப்பத்திரிகையை இன்று பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. #AircelMaxisCase #Chidambaram #CBI
புதுடெல்லி:
கடந்த 2006-ம் ஆண்டு மத்திய நிதி மந்திரியாக ப.சிதம்பரம் பதவி வகித்தபோது மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனம், ஏர்செல் நிறுவனத்தில் ரூ. 3,500 கோடி முதலீடு செய்தது.
இந்த முதலீட்டுக்கு பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுவின் அனுமதி பெறவில்லை எனவும், இதற்கு ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்துக்குச் சொந்தமான நிறுவனம் உதவியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இந்த விவகாரத்தை அமலாக்கத் துறையும், சிபிஐயும் தீவிரமாக விசாரித்து வருகின்றன. டெல்லியில் உள்ள பாட்டியாலா சிபிஐ நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடந்து வருகிறது.
இந்நிலையில், ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன்னாள் நிதி மந்திரி சிதம்பரம் பெயரை குறிப்பிட்டு சிபிஐ புதிய குற்றப்பத்திரிகையை இன்று தாக்கல் செய்துள்ளது. விடுபட்ட சில தகவல்கள், ஆதாரங்களை இணைத்து பாட்டியாலா நீதிமன்றத்தில் சிபிஐ இன்று புதிய குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
முன்னாள், இன்னாள் அரசு அதிகாரிகள் பெயரும் இந்த குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளது. ஏற்கனவே, இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரம் மீது ஏற்கனவே சிபிஐ குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. #AircelMaxisCase #Chidambaram #CBI