செய்திகள்

ஆட்டோ மீது அரசு பஸ் மோதி தாய், மகள் பலி- சிறுமிகள் உள்பட 3 பேர் படுகாயம்

Published On 2018-07-18 13:54 GMT   |   Update On 2018-07-18 13:54 GMT
பாலக்காடு அருகே ஆட்டோ மீது அரசு பஸ் மோதிய விபத்தில் தாய், மகள் பலியாயினர். சிறுமிகள் உள்பட 3 பேர படுகாயம் அடைந்துள்ளனர்.
கொழிஞ்சாம்பாறை:

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் ஒலவக்கோடு ரெயில்வே காலனியை சேர்ந்தவர் அச்சுதன். இவரது மனைவி பார்வதி (வயது 50). பார்வதியின் உறவினர் மன்னார்காட்டில் உள்ளனர். அவர்களது புதுமனை புகுவிழாவுக்கு அழைப்பு விடுத்தனர்.

விழாவில் கலந்து கொள்ள பார்வதியின் மகள் சுஜிதா (30). மருமகன் சுதீஷ் (30). பேத்தி ஆரதியா மற்றும் உறவினர் ஆரியா (15) ஆகியோருடன் ஆட்டோவில் நேற்று புறப்பட்டார். ஆட்டோவை மருமகன் சதீஷ் ஓட்டினார்.

மன்னார்காட்டில் நடந்த விழாவில் கலந்து கொண்டனர். பின்னர் மாலை வீட்டுக்கு புறப்பட்டனர். ஆட்டோ கரிம்பா அருகே வந்தபோது எதிரே பாலக்காட்டில் இருந்து மன்னார்காட்டுக்கு கேரள அரசு பஸ் வந்தது. எதிர்பாராதவிதமாக அரசு பஸ் ஆட்டோ மீது மோதியது. இதில் ஆட்டோ கூடுபோல் நொறுங்கியது.

ஆட்டோவில் இருந்த அனைவரும் படுகாயம் அடைந்து அலறி சத்தம் போட்டனர். அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து 5 பேரையும் மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி தாய் பார்வதி, மகள் சுஜிதா ஆகியோர் பரிதாபமாக இறந்தனர். படுகாயத்துடன் முதலுதவி சிகிச்சை பெற்ற சுதீஷ், ஆரதியா, ஆரியா ஆகியோர் பாலக்காடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இது குறித்து கல்லடிக்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
Tags:    

Similar News