செய்திகள்

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு- ப.சிதம்பரத்தை ஆகஸ்ட் 1-ம் தேதி வரை கைது செய்ய தடை விதித்தது டெல்லி ஐகோர்ட்

Published On 2018-07-03 13:27 IST   |   Update On 2018-07-03 13:27:00 IST
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரத்தை ஆகஸ்ட் 1-ம் தேதி வரை கைது செய்ய தடை விதித்து டெல்லி ஐகோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது. #INXMediaCase #ChidambaramGetsProtection
புதுடெல்லி :

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி  சிதம்பரம் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ப.சிதம்பரம் மத்திய நிதி மந்திரியாக இருந்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் வெளிநாட்டு நிதியை பெறுவதற்கு ஒப்புதல் வழங்கியதில் முறைகேடுகள் நடைபெற்றதாகவும், இதில் கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனங்கள் ஆதாயம் பெற்றதாகவும் சி.பி.ஐ. குற்றம்சாட்டியுள்ளது.

இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைக்கு கடந்த மே 31-ம் தேதி ஆஜராகும்படி ப.சிதம்பரத்திற்கு சி.பி.ஐ சம்மன் அனுப்பியிருந்தது தொடர்பாக தன்னை கைது செய்யாமல் இருக்க, டெல்லி ஐகோர்ட்டில் ப.சிதம்பரம் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தார்.

ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட டெல்லி ஐகோர்ட், ஜூலை 3-ம் தேதி (இன்று) வரை சிதம்பரத்தை கைது செய்ய இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்து இருந்தது.

இந்நிலையில், வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ப.சிதம்பரம் முன் ஜாமீன் மனுவிற்கு பதில் மனு அளிக்க கோர்ட்டில் சி.பி.ஐ அவகாசம் கோரியது. இதையடுத்து, ஆகஸ்ட் மாதம் 1- ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்த நீதிபதி, அதுவரை ப.சிதம்பரத்தை கைது செய்யக் கூடாது என தடை விதித்தார்.

இதேபோல் ஏர்செல் மேக்சிஸ் முறைகேடு வழக்கில் ஜூலை 10-ம் தேதி வரை ப.சிதம்பரத்தை கைது செய்ய டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. #INXMediaCase #ChidambaramGetsProtection
Tags:    

Similar News