செய்திகள்
ஆப்கன் தாக்குதலில் பலியான சீக்கியர்களின் உறவினர்களுடன் சுஷ்மா சந்திப்பு
ஆப்கானிஸ்தான் நாட்டில் நடந்த தாக்குதலில் பலியான சீக்கியர்களின் உறவினர்கள் இன்று வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜை சந்தித்தனர். #Nangarharsuicidebombing #SushmaSwaraj
புதுடெல்லி:
ஆப்கானிஸ்தான் நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள நன்கர்ஹர் மாகாணத்தின் தலைநகரான ஜலாலாபாத் என்னும் இடத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் அதிபர் அஷ்ரப் கானி பங்கேற்றார்.
அந்த நிகழ்ச்சி முடிந்து அவர் புறப்பட்டு சென்றவுடன் முக்காபெரட் சதுக்கம் பகுதியில் நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதலில் சீக்கியர்கள் உள்பட மொத்தம் 19 பேர் பலியாகினர். மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.
இதற்கிடையே, சீக்கியர்கள் மீது நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதல் கொடூரமானது, கோழைத்தனமானது என காபுலில் உள்ள இந்திய தூதரகம் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ஆப்கானிஸ்தான் நாட்டில் நடந்த தாக்குதலில் பலியான சீக்கியர்களின் உறவினர்கள் இன்று வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜை சந்தித்தனர். இந்தியா சார்பில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து பேசினர்.
ஆப்கனில் நடைபெற்ற தாக்குதலில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு சுஷ்மா சுவராஜ் இரங்கல் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. #Nangarharsuicidebombing #SushmaSwaraj