செய்திகள்

அதிகாரிகள் ஒத்துழைக்காததால் வீட்டின் அருகே தானே சாலை போட்ட உ.பி.மந்திரி

Published On 2018-06-23 11:31 GMT   |   Update On 2018-06-23 11:31 GMT
உத்தரபிரதேசம் மாநிலத்தில் பொதுப்பணித்துறை நிதி ஒதுக்கியும் சாலை போடப்படாததால் தனது இரு மகன்களின் துணையுடன் மாநில மந்திரி சாலைப் பணியாளராக மாறினார். #UPMinisterconstructsroad #Ministerconstructsroad
லக்னோ:

உத்தரபிரதேசம் மாநில மந்திரிசபையில் கேபினட் அந்தஸ்துடன் மந்திரியாக பதவி வகிப்பவர் ஓம் பிரகாஷ் ராஜ்பர். சுஹெல்தேவ் பாரதிய சமாஜ் கட்சியின் தலைவரான இவர் வாரனாசி மாவட்டம் பதேபூர் கவுடா கிராமத்தை சேர்ந்தவராவார்.

மந்திரி ஓம் பிரகாஷ் ராஜ்பரின் மகனுக்கு வரும் ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடைபெறுகிறது, இந்த திருமண விழாவுக்கு மாநில மந்திரிகள் பலர் வருவார்கள் என்பதால் தனது வீடு இருக்கும் பாதையை முக்கிய சாலையுடன் இணைக்கும் வகையில் தனது வீட்டின் அருகே 500 மீட்டர் தூரத்துக்கு புதிய சாலையை ஏற்படுத்த வேண்டும் என மாநில பொதுப்பணி துறைக்கு இவர் கடிதம் எழுதி இருந்தார்.

இதற்கு அனுமதி அளித்தும் சாலை போடும் பணிக்காக 16.77 லட்சம் ரூபாயை ஒதுக்கீடு செய்தும் கடந்த 30-5-2018 அன்று பொதுப்பணி துறை உத்தரவிட்டிருந்தது.

ஆனால், இந்த உத்தரவுக்கு பின்னர் 20 நாட்களாகியும் அங்கு சாலை போட அதிகாரிகள் முன்வராததால் தனது சொந்த செலவில், மகன்கள் அரவிந்த், அருண் ஆகியோரின் துணையுடன் தானே சாலைப் பணியாளராக மாறிய ஓம் பிரகாஷ் ராஜ்பர். சுமார் மூன்று மணிநேர உடல் உழைப்பில் சாலையை போட்டு முடித்து விட்டார்.

ஒரு மந்திரியால் தனது வீட்டின் அருகே சாலை போட முடியவில்லை என்றால் பொதுமக்களின் நிலைமை என்னவாக இருக்கும்? என்று கேட்கிறார் ஓம் பிரகாஷ் ராஜ்பர். #UPMinisterconstructsroad  #Ministerconstructsroad
Tags:    

Similar News