செய்திகள்

பைக்கில் வந்த தனக்கு வழிவிடாததால் ஆட்டோ டிரைவரை துப்பாக்கியால் சுட்ட பெண்

Published On 2018-06-21 06:54 GMT   |   Update On 2018-06-21 06:54 GMT
தலைநகர் டெல்லி அருகே உள்ள குருகிராமில் பைக்கில் வந்த தனக்கு வழிவிடாததால் ஏற்பட்ட தகராற்றில் ஆட்டோ டிரைவரை குறிவைத்து பெண் ஒருவர் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுடெல்லி:

தலைநகர் டெல்லி அருகே உள்ள குருகிராம் பகுதில் இருக்கும் பவானி என்கிளேவ் பகுதியில் உள்ள சந்து ஒன்றில் இன்று காலை ஆட்டோ டிரைவர் ஒருவர் தனது ஆட்டோவை நிறுத்தி விட்டு போன் பேசிக்கொண்டு இருந்துள்ளார். பைக்கில் அங்கு வந்த சப்னா என்ற 35 வயது பெண் வழிவிடக்கோரி டிரைவரிடம் வாக்குவாதம் செய்துள்ளார்.

வாக்குவாதம் முற்றி கைக்கலப்பு உருவாகிய சூழ்நிலையில், அங்குள்ளவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பினர். சிறிது நேரத்திற்கு பிறகு தனது வீட்டில் இருந்த நாட்டுத்துப்பாக்கியை எடுத்துக்கொண்டு சம்பவ இடத்திற்கு வந்த அந்த பெண், ஆவேசமாக டிரைவரை குறிவைத்து சுட்டுள்ளார்.

மயிரிழையில் டிரைவர் குண்டடி படாமல் தப்பிக்க, மீண்டும் துப்பாக்கியில் குண்டை நிரப்பியுள்ளார். அதற்குள், அங்குள்ளவர்கள் சுதாரித்துக்கொண்டு துப்பாக்கியை அந்த பெண்ணிடம் இருந்து பறித்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
Tags:    

Similar News