செய்திகள்

பாகிஸ்தானில் பிறந்த 3 சகோதரர்களுக்கு இந்திய குடியுரிமை அளிக்கப்பட்டது

Published On 2018-06-20 14:15 GMT   |   Update On 2018-06-20 14:15 GMT
தெலுங்கானா மாநிலம், நிஜாமாபாத் மாவட்டத்தில் வாழும் பாகிஸ்தானை சேர்ந்த 3 சகோதரர்களுக்கு இந்திய குடியுரிமை அளிக்கப்பட்டுள்ளது. #Pakistanbrothers #Indiancitizenship
ஐதராபாத்:

இந்தியாவின் (முன்னாள்) ஆந்திர மாநிலம், நிஜாமாபாத் மாவட்டத்தை சேர்ந்த இஸ்லாமியப் பெண் ஒருவர் கடண்ட்க்ஹ 1988-ம் ஆண்டு தனது தூரத்து உறவினரான பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவரை திருமணம் செய்துகொண்டு, கணவருடன் பாகிஸ்தானுக்கு சென்று குடியேறினார்.

அங்கு 3 ஆண் குழந்தைகளுக்கு தாயான அந்தப் பெண் பிற்காலத்தில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேற்றுமை காரணமாக அவரை விவாகரத்து செய்துவிட்டு கடந்த 2004-ம் ஆண்டு 3 குழந்தைகளுடன் நிஜாமாபாத்தில் உள்ள பிறந்த வீட்டுக்கு வந்து சேர்ந்தார்.

தனது மகன்களுக்கான விசாவை அவ்வப்போது புதுப்பித்து வந்த அந்தப் பெண் அவர்கள் மூவருக்கும் இந்தியாவில் நிரந்தரமாக குடியிருக்கும் உரிமை அளிக்கக்கோரி நிஜாமாபாத் மாவட்ட நிர்வாகத்திடம் மனு செய்திருந்தார். இந்த மனுவை பரிசீலித்த மாவட்ட நிர்வாகம், மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தது.

இதன் அடிப்படையில், அவர்கள் மூவருக்கும் நிரந்தர குடியுரிமை வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்தது. இதற்கான உத்தரவை நிஜாமாபாத் மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி நேற்று அந்த குடும்பத்தாரிடம் அளித்தார்.

தற்போது இந்திய குடியுரிமை பெற்றுள்ள முஹம்மது சனான், முஹம்மது ருமான் மற்றும் முஹம்மது சைப் ஆகிய இந்த மூன்று சகோதரர்களும் 20 முதல் 27 வயதுக்குட்பட்ட வாலிபர்களாக உள்ளனர். இவர்களில் மூத்தவர் பிடெக் பட்டதாரி.

இந்தியாவில் தொடர்ந்து 7 ஆண்டுகள் சட்டபூர்வமாக வசித்து வந்தவர்கள் நிரந்தர குடியுரிமை கோரி விண்ணப்பிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. #Pakistanbrothers #Indiancitizenship
Tags:    

Similar News