செய்திகள்
ஐசிஐசிஐ வங்கியின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக சந்தீப் பக்ஷி நியமனம்
ஐசிஐசிஐ வங்கி தலைவா் சந்தா கொச்சார் மீது முறைகேடு புகார் எழுப்பப்பட்டுள்ளதால் வங்கியின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக சந்தீப் பாக்ஷி நியமனம் செய்யப்பட்டுள்ளார். #ICICICEO #SandeepBakhshi
புதுடெல்லி:
ஐசிஐசிஐ வங்கி தலைமையிலான 20 வங்கிகள் கூட்டமைப்பு வீடியோகான் நிறுவனத்துக்கு கடந்த 2012ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ரூ.3,250 கோடி கடன் வழங்கியது. இதன்பின், ஐசிஐசிஐ வங்கியின் தலைமை செயல் அதிகாரி சந்தா கொச்சாரின் கணவர் தீபக் கொச்சாரின் நிறுவனத்துக்கு குறிப்பிட்ட தொகையையும் பங்குகளையும் வீடியோகான் நிறுவனம் முறைகேடாக பரிமாற்றம் செய்ததாகக் கூறப்படுகிறது.
வீடியோகான் பெற்ற கடனில் சுமார் ரூ.2800 கோடிக்கு மேல் திருப்பிச் செலுத்தப்படாத நிலையில், வழங்கப்பட்ட ரூ.3250 கோடி கடனும் வாராக்கடனாக அறிவிக்கப்பட்டது.
சந்தா கொச்சார்
இதனையடுத்து, வீடியோகான் நிறுவனத்துக்கு கடன் வழங்கியதில் சந்தா கொச்சாரின் குடும்பத்தினர் பயனடைந்துள்ளனர் என இந்திய முதலீட்டாளர்கள் பாதுகாப்பு அறங்காவல் குழு குற்றம்சாட்டியது. இதுகுறித்து விசாரணை நடத்த பிரத்யேக குழுவை அமைக்கப்போவதாகவும் வங்கி நிர்வாகம் அறிவித்தது. இந்த குழு விசாரணை நடத்தி முடிக்கும் வரை சந்தா கொச்சார் தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுவதாக வங்கி நிர்வாகம் அறிவித்தது.
இந்நிலையில், ஐசிஐசிஐ வங்கியின் புதிய தலைமை செயல் அதிகாரியாக சந்தீப் பக்ஷி நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தற்காலிக மற்றும் முழுநேர தலைவராக செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தீப் பாக்ஷி இதற்கு முன்னா் ஐசிஐசிஐ வங்கியின் இயக்குனராக பதவி வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. #ICICICEO #SandeepBakhshi