செய்திகள்

ரூ.2 கோடி செலவில் பேட்டரி பஸ் - டீசலுக்கு ‘குட்பை’ சொன்ன கேரள அரசு

Published On 2018-06-18 05:26 GMT   |   Update On 2018-06-18 05:37 GMT
செல்போன் சார்ஜர் மற்றும் கழிப்பறை வசதிகளுடன் ரூ.2 கோடி செலவில் உருவாக்கப்பட்ட நவீன பஸ்சை கேரள அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.
திருவனந்தபுரம்:

கேரளாவில் முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையில் கம்யூனிஸ்டு கட்சியின் ஆட்சி அமைந்தபிறகு அரசு நடவடிக்கைகளில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது.

கேரள அரசு போக்குவரத்துக்கழகமும் தற்போது நவீன மயமாகி வருகிறது. பொதுமக்கள் வசதிக்காக பல்வேறு புதிய திட்டங்களும் போக்குவரத்துத்துறையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு கட்டமாக பேட்டரியில் இயங்கும் நவீன பஸ்சை கேரள அரசு போக்குவரத்துக்கழகம் அறிமுகம் செய்துள்ளது.

இந்த பஸ் ரூ.2 கோடியே 5 லட்சம் செலவில் உருவாகி உள்ளது. 5 மணிநேரம் மின்சாரம் மூலம் இந்த பஸ்சின் பேட்டரியை சார்ஜ் செய்தால் தொடர்ந்து 350 கிலோ மீட்டர் தூரத்திற்கு பஸ்சை இயக்க முடியும். முழுவதும் குளிரூட்டப்பட்ட வசதி கொண்ட இந்த பஸ்சில் பயணிகள் நெருக்கடி இன்றி பயணம் செய்ய வசதியாக 35 சொகுசு இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. குடிநீர், கழிவறை போன்ற வசதிகளும் செய்யப்பட்டு உள்ளது. செல்போன் சார்ஜ் செய்யவும் ஒவ்வொரு இருக்கை அருகேயும் அதற்கான மின்சாதன வசதியும் அமைந்துள்ளது.

வேக கட்டுப்பாட்டு கருவி, தானியங்கி முறையில் கதவுகள் மூடி-திறக்கும் வசதிகள் என்று பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் இந்த பஸ்சில் செய்யப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் தங்களது 3 சக்கர நாற்காலியுடன் பஸ்சில் சிரமமின்றி ஏறி, இறங்கவும் தனி வழி இந்த பஸ்சில் உண்டு.

இந்த நவீன பஸ் இன்று சோதனை முறையில் இயக்கப்படுகிறது. படிப்படியாக 300 நவீன பஸ்களை மாநிலம் முழுவதும் இயக்க அரசு திட்டமிட்டு உள்ளது. #Kerala #ElectricBus
Tags:    

Similar News