செய்திகள்

காஷ்மீரில் பாதுகாப்பு படையினருடன் போராட்டக்காரர்கள் மோதல் - வாலிபர் உயிரிழப்பு

Published On 2018-06-16 08:37 GMT   |   Update On 2018-06-16 08:37 GMT
ஜம்மு காஷ்மீரில் ரம்ஜான் சிறப்பு தொழுகைக்கு பிறகு பாதுகாப்பு படையினருடன் போராட்டக்காரர்கள் மோதலில் ஈடுபட்டனர். இதில் ஒரு வாலிபர் உயிரிழந்தார். KashmirClashes #JKEid
ஸ்ரீநகர்:

இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான ரம்ஜான் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி அனைத்து மசூதிகளிலும் சிறப்பு தொழுகை நடைபெற்றது. திறந்த வெளி தொழுகையும் நடைபெற்றது. காஷ்மீரில் பதற்றத்திற்கு மத்தியில் பொதுமக்கள் ரம்ஜான் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். ஆனால், ஒரு சில இடங்களில் போராட்டக் காரர்கள் பாதுகாப்பு படையினருடன் மோதலில் ஈடுபட்டதால் அமைதியற்ற சூழல் காணப்பட்டது.

ஆனந்த்நாக் மாவட்டம் பிரக்போராவில் ரம்ஜான் தொழுகையை அடுத்து உள்ளூர் இளைஞர்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் இடையே மோதல் வெடித்தது. பாதுகாப்பு படையினரை நோக்கி இளைஞர்கள் கற்களை வீசி தாக்கி உள்ளனர். பாதுகாப்பு படையினரும் அவர்கள் மீது தாக்குதல் நடத்தி விரட்டியடித்தனர்.

இந்த மோதலில் ஷீரஜ் அகமது என்ற வாலிபர் உயிரிழந்தார். மேலும் சிலர் காயம் அடைந்துள்ளனர். இதேபோல் சபாகதல், சோபோர், குப்வாரா பகுதிகளிலும் மோதல் ஏற்பட்டது.

ஜம்மு காஷ்மீரில் ரமலான் மாதத்தை முன்னிட்டு பயங்கரவாத வேட்டையை பாதுகாப்பு படை நிறுத்தியது. எல்லையிலும் சண்டை நிறுத்தம் செய்யப்பட்டது. இருப்பினும் பயங்கரவாதிகள் தரப்பில் அவ்வப்போது தாக்குதல் நடத்தியதால், பாதுகாப்பு படையினர் பதிலடி கொடுத்து வருகின்றனர். #KashmirClashes #JKEid

Tags:    

Similar News