செய்திகள்
கோர்ட் வளாகத்தில் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த கணவன்
அசாம் மாநிலத்தில் கோர்ட் வளாகத்தில் எதிர் சாட்சி சொல்ல வந்த மனைவியை கணவன் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. #ManKillsWife #MurderInAssamCourt
திப்ருகர்:
அசாம் மாநிலம் திப்ருகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பூர்ண நகார் தேகா. இவர் தனது 13 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக மனைவி ரீட்டா நகார் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புகார் அளித்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பூர்ண நகார் தேகாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். சமீபத்தில் ஜாமீன் பெற்ற பூர்ண நகார், திப்ருகர் நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு விசாரணைக்கு ஆஜராகி வருகிறார்.
இந்நிலையில், திப்ருகர் நீதிமன்றத்தில் இன்று இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றம்சாட்டப்பட் பூர்ண நகார் மற்றும் அவருக்கு எதிராக சாட்சி அளிப்பதற்காக அவரது மனைவி ரீட்டா ஆகியோர் தனித்தனியாக கோர்ட்டுக்கு வந்தனர்.
ஆனால், விசாரணை தொடங்குவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பாக, திடீரென பூர்ண நகார் தன் மனைவி ரீட்டாவை கூர்மையான ஆயுதத்தால் தாக்கினார். இதில், ரீட்டாவின் கழுத்தில் வெட்டு விழுந்தது. ரத்தம் சொட்டச் சொட்ட அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே அவர் இறந்துவிட்டார்.
மனைவியை கொலை செய்த பூர்ண நகாரை போலீசார் கைது செய்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், தான் எந்த தவறும் செய்யவில்லை என்றும், பொய் புகார் கொடுத்து வழக்கில் சிக்க வைத்ததால் மனைவியை கொலை செய்ததாகவும் கூறினார். #ManKillsWife #MurderInAssamCourt