செய்திகள்
கோரக்பூர் மருத்துவமனை விவகாரத்தில் தொடர்புடைய டாக்டரின் சகோதரர் மீது துப்பாக்கி சூடு
உத்தரப்பிரதேசம் மாநிலம் கோரக்பூர் மருத்துவமனை விவகாரத்தில் தொடர்புடைய டாக்டர் கபில் கானின் சகோதரர் மீது மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர். #GorakhpurHospital #DoctorKafeelKhan #KashifJameel
லக்னோ:
உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் கோரக்பூரில் உள்ள பாபா ராகவ்தாஸ் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 63 குழந்தைகள் உயிரிழந்தனர். தொடர்ந்து அந்த மருத்துவமனையில் குழந்தைகள் இறந்து வருவது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக உ.பி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, இந்த விவகாரத்தில் தொடர்புடைய டாக்டர் கபில் கானை உ.பி. மாநில சிறப்பு புலனாய்வு குழுவினர் கைது செய்தனர்.
இந்நிலையில், உத்தரப்பிரதேசம் மாநிலம் கோரக்பூர் மருத்துவமனை விவகாரத்தில் தொடர்புடைய டாக்டர் கபில் கானின் சகோதரர் மீது மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர்.
இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், ஹுமாயுன்பூர் பகுதியில் சென்று கொண்டிருந்த காஷிப் ஜமீல் மீது மர்ம நபர்கள் திடீரென துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் குண்டுகள் பாய்ந்து படுகாயம் அடைந்த காஷிப் ஜமீலை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகின்றார். துப்பாக்கியால் சுட்ட நபர்களை தேடி வருகிறோம் என தெரிவித்தனர். #GorakhpurHospital #DoctorKafeelKhan #KashifJameel