செய்திகள்

உத்தரபிரதேசத்தில் மனைவியை காதலனுக்கு தாரை வார்த்த வாலிபர்

Published On 2018-05-31 06:41 GMT   |   Update On 2018-05-31 06:41 GMT
மனைவியை காதலனுக்கு தாரை வார்க்கும் சம்பவங்களை சினிமாவில் மட்டுமே பார்த்து இருக்கிறோம். அதுபோல் உண்மையிலேயே உத்தரபிரதேசத்தில் ஒரு சம்பவம் நடந்து இருக்கிறது.
கான்பூர்:

லக்னோவில் கோசைன் கஞ்ச் பகுதியை சேர்ந்தவர் ரவி. இவர் லக்னோவின் ஷியாம் நகர் பகுதியைச் சேர்ந்த சாந்தி என்ற பெண்ணை காதலித்து வந்தார்.

இந்த நிலையில் சாந்திக்கும் சனிக்வான் பகுதியைச் சேர்ந்த சுஜித் என்ற வாலிபருக்கும் பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர். கடந்த பிப்ரவரி மாதம் இவர்களது திருமணம் நடந்தது. ஒரு மாதம் மட்டுமே இருவரும் சேர்ந்து வாழ்ந்த நிலையில் சாந்தி பெற்றோர் வீட்டுக்கு சென்றார். அதன் பிறகு கணவரை சந்திக்க வரவில்லை. இதையடுத்து சுஜித் சாந்தி வீட்டுக்கு சென்று தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்தார். அதற்கு அவர் மறுத்து விட்டார்.

ஏன் என்று கேட்ட போது சாந்தி ரவியுடன் காதல் வலையில் வீழ்ந்ததை தெரிவித்தார். ஆனால் தனது கருத்தை கேட்காமல் பெற்றோர் திருமணம் செய்து வைத்து விட்டனர். காதலனை மனதில் வைத்துக் கொண்டு உங்களுடன் வாழ பிடிக்கவில்லை என்று நிலைமையை எடுத்துக் கூறினார்.


இதைக் கேட்ட சுஜித் மனம் இறங்கினார். மனைவியை காதலனுடன் சேர்த்து வைக்க முடிவு செய்து உள்ளூர் போலீஸ் நிலையத்துக்கு சென்று தனது முடிவை தெரிவித்தார். போலீசார் பாதுகாப்பு அளிக்க ஒப்புக் கொண்டனர்.

நேற்று சனிக்வான் பகுதியில் உள்ள அனுமன் கோவிலுக்கு மனைவி சாந்தியையும், காதலன் ரவியையும் சுஜித் வரவழைத்தார். அவர்களது உறவினர்களும் வந்தனர். அவர்கள் முன்னிலையில் மனைவியை காதலனிடம் ஒப்படைத்தார். இருவரும் கோவிலிலேயே திருமணம் செய்து கொண்டனர். #Tamilnews
Tags:    

Similar News