செய்திகள்
கர்நாடக எம்.எல்.ஏ சாலை விபத்தில் பலி - ராகுல் காந்தி இரங்கல்
கர்நாடக எம்.எல்.ஏ. சித்து பீமப்ப நியாம்கவுடு, சாலை விபத்தில் பலியானதை அறிந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். #SidduNyamagouda #RahulGandhi
புதுடெல்லி:
கர்நாடகம் மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதனால் மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியை கைப்பற்றின. புதிய முதல் மந்திரியாக மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி தலைவர் குமாரசாமி பதவியேற்றார்.
இதற்கிடையே, பாகல்கோட் மாவட்டம் ஜம்கண்டி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக பதவியேற்றவர் சித்து பீமப்ப நியாம்கவுடு. இவர் கோவாவில் இருந்து கர்நாடகாவின் பாகல்கோட் நகருக்கு காரில் வந்தபோது ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தார்.
இந்நிலையில், கர்நாடக எம்.எல்.ஏ. சித்து பீமப்ப நியாம்கவுடு, சாலை விபத்தில் பலியானதை அறிந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் கூறுகையில், கர்நாடக எம்.எல்.ஏ. சித்து பீமப்ப நியாம்கவுடு சாலை விபத்தில் பலியானதை அறிந்தேன். மூத்த தலைவரான அவர் கர்நாடக மக்களின் வளர்ச்சியில் மிகுந்த அக்கறை கொண்டவர். அவரது இறப்புக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சி மொத்தம் 78 தொகுதிகளில் வெற்றி பெற்றது. தற்போது சித்து மறைந்ததையடுத்து, சட்டமன்றத்தில் காங்கிரசின் பலம் 77 ஆக குறைந்துள்ளது. #SidduNyamagouda #RahulGandhi