செய்திகள்

பா.ஜ.க. எம்.எல்.ஏ.வை தூக்கிலிட வேண்டும் - உன்னாவ் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இளம்பெண் வலியுறுத்தல்

Published On 2018-05-11 06:55 GMT   |   Update On 2018-05-11 06:55 GMT
உன்னாவ் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இளம்பெண் தன் வாழ்வை சீரழித்த பா.ஜ.க.. எம்.எல்.ஏ.வை தூக்கிலிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். #UnnaoCase #DeathPenalty
லக்னோ:

உத்தரப்பிரதேசம் மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் உள்ள பங்கர்மாவ் தொகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கார் மற்றும் அவரது சகோதரர்கள் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 17-ம் தேதி தன்னை பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக இளம்பெண் ஒருவர் 20-6-2017 அன்று போலீசில் புகாரளித்திருந்தார்.

இதனையடுத்து, அந்த புகாரை வாபஸ் பெறும்படி எம்.எல்.ஏ.வின் அடியாட்கள் அப்பெண்ணின் தந்தையை தாக்கியதாக மற்றொரு புகார் அளிக்கப்பட்டது.

மேற்கண்ட புகார்களின் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காத நிலையில், அந்த பெண் முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் வீட்டின் முன் தீக்குளிக்க முயன்றார். இதற்கிடையே, பழைய வழக்கு ஒன்றில் கடந்த 5-ம் தேதி திடீரென அப்பெண்ணின் தந்தை சுரேந்திரா சிங் கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் கடந்த 11-ம் தேதி உயிரிழந்தார்.

நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இவ்விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு உ.பி,. முதல்வர் உத்தரவிட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட பெண் சார்பில் முதல்வருக்கு அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில், இச்சம்பவம் தொடர்பாக அலகாபாத் உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்தது.

பா.ஜ.க. எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கார்-ஐ உடனடியாக கைது செய்யுமாறு சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். இதைதொடர்ந்து, இந்திராநகர் பகுதியில் உள்ள வீட்டில் உன்னாவ் தொகுதி பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் குல்தீப் சிங் சென்கார்-ஐ ஏப்ரல் 13-ம் தேதி  சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர்.

இந்நிலையில், “தன்னை பாலியல் பாலாத்காரம் செய்து, தன் தந்தையையும் கொன்ற பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் குல்தீப் சிங் சென்கார்-ஐ தூக்கிலிட வேண்டும்” என பாதிக்கப்பட்ட இளம்பெண் இன்று தெரிவித்தார். மேலும், எங்கள் தரப்பு நியாயங்களை எந்த பயமும் இன்றி கோர்ட்டில் தெரிவிக்க எங்கள் குடும்பத்துக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். #UnnaoCase #DeathPenalty
Tags:    

Similar News