செய்திகள்
கைதான உதயன், உமேஷ்.

வெளிநாட்டு பெண்ணுக்கு போதை மருந்து கொடுத்து கற்பழித்து கொலை - 2 பேர் கைது

Published On 2018-05-04 04:38 GMT   |   Update On 2018-05-04 04:38 GMT
திருவனந்தபுரத்தில் சுற்றுலா வழிகாட்டி போல நடித்து வெளிநாட்டு பெண்ணுக்கு போதை மருந்து கொடுத்து கற்பழித்து கொலை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள போத்தன்கோட்டில் உள்ள ஆயுர்வேத சிகிச்சை மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்தவர் லிகா. இவர் லாத்வியா நாட்டைச் சேர்ந்தவர்.

இவருடன் இவரது சகோதரி இலீசும் உடன் தங்கி இருந்தார். இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் 14-ந்தேதி தான் தங்கி இருந்த ஆயுர்வேத மருத்துவ மனையில் இருந்து வெளியில் சென்றவர் அதன் பிறகு மீண்டும் அங்கு திரும்பி வரவில்லை.

இதனால் அவரது சகோதரி இலீஸ் இதுபற்றி போத்தன்கோடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான வெளிநாட்டுப் பெண்ணை தேடி வந்தனர். அப்போது அந்த பகுதியில் உள்ள வாழமுட்டத்து கண்டல்காடு என்ற இடத்தில் லிகா, தலை துண்டான நிலையில் பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.அவரது பிணம் அழுகிய நிலையில் இருந்தது.

லிகாவின் பிணத்தை கைப்பற்றிய போலீசார் திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரது உடல் பாகங்கள் ரசாயன பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.

தனது சகோதரியின் மரணத்திற்கு காரணமானவர்களை உடனே கைது செய்ய வேண்டுமென்று இலீஸ் போராடினார். கேரள முதல்-மந்திரி, எதிர்க்கட்சித் தலைவர் என்று பல்வேறு தரப்பினரையும் சந்தித்து அவர், இது தொடர்பாக கோரிக்கை விடுத்தார்.

இந்த நிலையில் லிகா கொலை தொடர்பாக பனத்துறையைச் சேர்ந்த உமேஷ் (வயது 28), உதயன் (24) என்ற 2 வாலிபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் போதை மருந்து கொடுத்து லிகாவை கற்பழித்து கொலை செய்தது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.

சம்பவத்தன்று லிகா, மருத்துவமனையில் இருந்து வெளியில் சென்றபோது, முதலில் அவரை உமேஷ் சந்தித்துள்ளார். தன்னை சுற்றுலா வழிகாட்டி என்று அறிமுகம் செய்த அவர், தன்னிடமிருந்த போலி அடையாள அட்டையையும் அவரிடம் காண்பித்து அவரை நம்ப வைத்தார்.

பிறகு அவர், போன் மூலம் தகவல் கொடுத்து தனது நண்பர் உதயனை அங்கு வரவழைத்தார். பிறகு 3 பேரும் சிறிய படகு மூலம் அந்த பகுதியில் உள்ள காயல் வழியாக காட்டுப்பகுதிக்கு சென்றனர். அங்கு வைத்து லிகாவுக்கு அவர்கள் போதை மருந்தை கொடுத்தனர். இதில் மயங்கிய அந்த பெண்ணை காலையில் இருந்து மாலை வரை பலமுறை கற்பழித்தனர்.

இந்த நிலையில் போதை தெளிந்த லிகா, அந்த வாலிபர்களிடம் இருந்து தப்ப முயன்றார். அவர், தங்களை காட்டிக் கொடுத்து விடுவார் என்ற பயத்தில் அவர்கள் இருவரும் சேர்ந்து லிகாவை கழுத்தை நெரித்து கொலை செய்தனர்.

பிறகு லிகா தற்கொலை செய்து கொண்டது போல தெரிய வேண்டும் என்பதற்காக அவரது பிணத்தை கயிற்றில் கட்டி அங்குள்ள மரத்தில் தொங்க விட்டனர். அதன் பிறகு லிகாவின் பிணம் அழுகி கீழே விழுந்ததில் தலை தனியாக, உடல் தனியாக கிடந்துள்ளது. இந்த வழக்கு பற்றி டி.ஜி.பி. லோக்நாத் பொக்ரா, உத்தரவின்பேரில் தனி போலீஸ் படை நடத்திய விசாரணையின்போது, கொலையாளிகள் இருவரும் போலீஸ் பிடியில் சிக்கிக் கொண்டனர்.

இந்த கொலையாளிகள் பற்றி பொதுமக்கள் சிலர் போலீசாருக்கு கொடுத்த ரகசிய தகவலும் போலீசாரின் விசாரணைக்கு பெரும் உதவியாக இருந்தது. அவர்கள் இருவரையும் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைக்கிறார்கள்.

இதற்கிடையில் லிகாவின் உடல் தகனம் நேற்று திருவனந்தபுரம் மின்மயானத்தில் நடைபெற்றது. அவரது அஸ்தியை சகோதரி இலீஸ் பெற்றுக் கொண்டார். முன்னதாக கேரள மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன் அங்கு சென்று இறுதி சடங்கு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இலீசுக்கு ஆறுதல் கூறினார்.


Tags:    

Similar News